மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவரும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியில் விளையாடி வரும் சச்சின் நேற்று அபாரமாக சதமடித்தார். இந்தப் போட்டியைக் காணவந்த ரசிகர்கள் சிலர் தங்களின் திருமணத்தை நிறுத்திவிட்டு வந்து சச்சினை உற்சாகப்படுத்தினர்.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நாட்டின் முக்கிய நகரங்களில் நேற்று துவங்கின. மும்பையில் துவங்கிய காலிறுதியில் மும்பை, பரோடா அணிகள் விளையாடுகின்றன.
சமீபத்தில், சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், மும்பை அணியில் இடம் பிடித்தார். "டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் அஜித் அகார்கர், பேட்டிங் தேர்வு செய்தார். முதலில் தடுமாறினாலும் பின்னர் ஜோடி சேர்ந்த வாசிம் ஜாபர், சச்சின் ஜோடி அசத்தலாக ஆடியது. ஜாபர் ரஞ்சி கோப்பை தொடரில் தனது 31வது சதத்தை பதிவு செய்தார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் மும்பை அணி 3 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்திருந்தது. ஜாபர் (137) அவுட்டாகாமல் இருந்தார்.
இந்தியாவில், முதல் தர போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள கவாஸ்கர் சாதனையை(81) சச்சின் நெருங்குகிறார். நேற்று அசத்திய இவர் தனது 80வது சதத்தை எட்டினார். சர்வதேச போட்டிகளில் சச்சின் 100 சதம் அடித்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் கவாஸ்கர் 20 சதம் அடித்துள்ளார். சச்சின், 18 சதம் அடித்துள்ளார்.
திருமணத்தை மறந்த ரசிகர்கள்
நேற்றைய போட்டி நடைபெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறின. மைதானத்தில் பார்வையாளர்களாக வந்த சிலர் பட்டுப்புடவை, ஷெர்வானி அணிந்து வந்து அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு மும்பை கிரிக்கெட் அசோசியேசன் பேங்க்விட் ஹாலில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மைதானத்தில் சச்சின் பேட்டிங் செய்கிறார் என்று தெரிந்த உடன் அனைவரும் திருமணத்தை மறந்து ஜோடியாக கிரிக்கெட் பார்க்க வந்து அமர்ந்து விட்டனர்.
அதோடு மட்டுமல்லாது சச்சினை சிக்கர் அடிக்கவும், பவுண்டரி அடிக்கவும் கேட்டு உற்சாகப்படுத்தினர். திருமணத்தை நிறுத்திவிட்டு கிரிக்கெட் பார்க்க வந்த செய்தி சச்சினுக்கு தெரியவந்த உடன் ரசிகர்களின் செயலுக்கு நெகிழ்ந்த சச்சின் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்கரை விளாசினார். நேற்றைய போட்டியில் மொத்தம் 108 ரன்களை அவர் எடுத்தார்.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த சச்சின், இந்த சீசனில் (2012-13) இரண்டாவது முறையாக சதம் அடித்துள்ளார். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் ரயில்வே அணிக்கு எதிராக விளையாடிய சச்சின் 137 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.