
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான டுவென்டி 20 தொடர் முடிந்த நிலையில் தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒநாள் தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்தது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்தியத் தரப்பு பேட்டிங்கைத் தொடங்கியது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
20 ரன்களை எடுப்பதற்குள் 4 விக்கெட்களை இந்தியா இழந்ததால் ரசிகர்கள் பெரும் கொதிப்படைந்து விட்டனர். இதனால் பலர் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். வெளியில் போட்டியைக் காண காத்திருந்தவர்களிடம் பாதி விலைக்கு டிக்கெட்களை விற்று விட்டு வீடுகளுக்குத் திரும்பியதைப் பார்க்க முடிந்தது.
இவ்வளவு மோசமாக இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கவே இல்லை என்று ரசிகர்கள் பலரும் குமுறல் வெளியிட்டனர். பரம வைரியான பாகிஸ்தானிடம் இப்படி இந்தியா மண்டியிட்டதை ஜீரணிக்க முடியவில்லை என்று ரசிகர்கள் பலர் வருத்தம் தெரிவித்தனர்.
மொத்தத்தில் இன்றைய நாள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் சோகமான நாளாக மாறிப் போய் விட்டது.