
பிரணாப் முகர்ஜி மறைவு
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தன்னுடைய 84வது வயதில் நேற்று காலமானார். கடந்த 2012 முதல் 2017 வரை நாட்டின் ஜனாதிபதியாக செயலாற்றிய பிராணாப் முகர்ஜி, மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை கடந்த காலங்களில் வகித்துள்ளார்.

சேவை குறித்து நினைவுகூர்ந்த சச்சின்
அவரது மறைவையொட்டி கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த வீரர்கள் தங்களது அஞ்சலியை சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தனது டிவிட்டர் பதிவில் தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்துள்ளார். பிரணாப் முகர்ஜி நாட்டிற்காக செய்த சேவையை நினைவு கூர்ந்துள்ள சச்சின், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

விராட் கோலி வருத்தம்
இந்நிலையில் நாடு திறமையான தலைவரை இழந்துவிட்டதாக கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு அவர் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். அனைவருக்கும் உத்வேகம் அளித்தவர் என்று ரோகித் சர்மா டிவீட் செய்துள்ளார்.

ஜூலான் கோஸ்வாமி வருத்தம்
இதனிடையே பேட்மிண்டன் நட்சத்திரம் சாய்னா நேவாலும் பிரணாப் முகர்ஜியின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜூலான் கோஸ்வாமி, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே, பௌலர்கள் அஸ்வின், இஷாந்த் சர்மா ஆகியோரும் தங்களது இரங்கலை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளனர்.

பிரணாப்பின் மகன் பதிவு
உடல்நலக்குறைவு காரணமாக ஆர்ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்ததாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். அவரது உடல்நிலை தேறுவதற்காக பிரார்த்தனை மேற்கொண்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications