நாக்பூர்: நாக்பூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், இந்தியா 441 ரன்களுக்கு முதல் இன்னி்ங்ஸை இழந்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்துள்ளது.
நாக்பூரில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
நேற்று இந்தியாவின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அபார சதம் போட்டார். ஷேவாக், 66, விஜய் 33, லட்சுமண் 64 எடுத்தனர்.
இன்று கங்குலியும், டோணியும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கங்குலி சிறப்பாக ஆடினார். சதம் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கங்குலி 85 ரன்கள் எடுத்த நிலையில் கிரஸ்ஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து கங்குலி ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் போட்ட அரை சதம், அவருக்கு 35வது அரை சதமாகும்.
மறு முனையில் டோணி 56 ரன்கள் சேர்த்த நிலையி்ல ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும், ஜாகிர்கானும் ஜோடி சேர்ந்தனர். இருப்பினும் ஜாகிர்கான் விரைவில் ஆட்டமிழந்தார். ஹர்பஜன் சிங் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் இந்த ஜோடியால் நீண்ட நேரம் நீடிக்க முடியவில்லை. கிரஸ்ஜா ரூபத்தில் இந்தியாவுக்கு விக்கெட் சரிவு ஏற்பட்டது.
அடுத்தடுத்து விக்கெட்களைக் கைப்பற்றிய கிரஸ்ஜா, இந்தியாவின் கடைசி வரிசை வீரர்களை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.
இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 441 ரன்களில் ஆட்டமிழந்தது. ஹர்பஜன் சிங் 18 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சுழற்பந்து வீச்சாளர் கிரஸ்ஜா சிறப்பாக பந்து வீசி 8 விக்கெட்களை சாய்த்தார். அறிமுகப் போட்டியில் 8 விக்கெட்கள வீழ்த்திய நான்காவது வீரர் என்ற சாதனையையும் கிரஸ்ஜா படைத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்த நிலையி்ல் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.
ஹெய்டன் 16 ரன்களும், பான்டிங் 24 ரன்களும் எடுத்தனர். ஆனால் காடிச் மற்றும் மைக் ஹுஸ்ஸி இணைந்து ஆஸ்திரேலியாவின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து ரன்களை குவித்தனர்.
காடிச் ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், ஹுஸ்ஸி அவருக்கு துணையாக ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் எடுத்துள்ளனர்.