டெல்லி: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் கமிட்டியில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில்தான் செளரவ் கங்குலி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில், கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் கமிட்டியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய செயலாளர் என்.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தொழில்நுட்பக் குழுவில் உறுப்பினராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்டவரான கங்குலியின் நியமனம், தொழில்நுட்பக் குழுவுக்கு பலமாக அமையும என்றார்.
தொழில்நுட்பக் குழுவின் தலைவராக சுனில் கவாஸ்கர் செயல்படுகிறார். தேசிய தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்தும் இதில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்நுட்பக் குழு உறுப்பினர்கள் விவரம் - சுனில் கவாஸ்கர் (தலைவர்), சேத்தன் செளகான், எம்.வி.ஸ்ரீதர், பிமன் பட்டசார்ஜி, மிலிந்த் ரெகே, ஞானேந்திர பாண்டே, கிறிஸ் ஸ்ரீகாந்த், செளரவ் கங்குலி, வி.கே.ராமசாமி, என்.சீனிவாசன்.