கங்குலி நீக்கத்தால் இந்திய வீரர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையிலான முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகிய வீரர்கள் இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கங்குலி மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். லட்சுமணனும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டிராவிடும் ஓரளவுக்கு நன்றாகவே விளையாடினார்.
ஆனால் ஒரு நாள் தொடரில் தடாலடியாக இவர்கள் மூன்று பேரும் நீக்கப்பட்டுள்ளது டெஸ்ட் அணி வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
என்ன காரணத்திற்காக கங்குலியை நீக்கினர் என்று புரியாமல் இந்திய அணியின் மூத்த வீரர்கள் அதிருப்தியுடன் உள்ளனராம்.
ஒரு வருட கால அணி நீக்கத்திற்குப் பின்னர் கடந்த ஆண்டுதான் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார் கங்குலி. அணியில் மீண்டும் இடம் பிடித்த பின்னர் தனது சிறப்பான ஆட்டத்ைத வெளிப்படுத்தி வந்தார் கங்குலி.
குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவர் தனது ஸ்திரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 32 போட்டிகளில் 1240 ரன்களைக் குவித்து அணியின் 2வது திறமையான வீரராக விளங்குகிறார் கங்குலி. இதில் 12 அரை சதங்களும் அடக்கம்.
2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அணியிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்ட பின்னர், அவரது பேட்டிங் சராசரி 41.02 சதவீதமாக உள்ளது.
கங்குலியை விட சிறந்த வீரராக சச்சின் மட்டுமே உள்ளார். அவர் 33 போட்டிகளில் ஆடி 1425 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் கங்குலியை அணியிலிருந்து நீக்கியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கங்குலி சிறப்பாக விளையாடி வரும் நிலையில் அவரை அணியிலிருந்து நீக்கியிருப்பது இமாலய முட்டாள்தனம் என்று அவரது ரசிகர்கள் கருதுகிறார்கள்.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக இந்திய தேர்வாளர் குழு நடந்து கொண்டுள்ளது என்றும் அவர்கள் குமுறுகிறார்கள்.
ஸ்டீவ் பக்னரும், மைக் புராக்டரும் இந்திய அணிக்கு விரோதமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டிய இந்திய கிரிக்கெட் நிர்வாகம், இப்போது கங்குலிக்கு விரோதமாக நடந்து கொண்டுள்ளது அதன் குழப்பமான கொள்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் ரசிகர்கள் கோபத்துடன் கூறுகின்றனர்.
கொல்கத்தாவில் கங்குலியின் ரசிகர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கங்குலியை அணியில் சேர்க்காவிட்டால் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:11 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications