பெங்களூர்: முன்னணி பேட்ஸ்மென்கள் கைவிட்ட நிலையில் கடைசி வரிசையில் இறங்கிய ஹர்பஜன் சிங்கும், ஜாகிர்கானும் இணைந்து சிறப்பாக ஆடி இந்தியாவின் முதல் இன்னிங்ஸை கெளரவமான நிலைக்குக் கொண்டு சென்றனர். இன்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 360 ரன்களுக்கு இழந்தது. ஜாகிர்கான் அரை சதம் போட்டார்.
பெங்களூரில் நடந்து வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், முதலில் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 430 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியாவுக்கு கம்பீரும், ஷேவாக்கும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
ஆனால் வழக்கம் போல பின்னால் வந்த முன்னணி வீரர்கள் சொதப்பியெடுத்து விட்டனர்.
டிராவிடும், கங்குலியும் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படி ஆடினர். டிராவிட் 51 ரன்களைச் சேர்த்தார். கங்குலியின் பங்கு 47. ஆனால் வி.வி.எஸ்.லட்சுமண் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர் கஷ்டப்பட்டு 13 ரன்களைச் சேர்த்து வெளியேறினார். டோணி 9 ரன்களுக்கு சுருண்டார்.
ஒரு கட்டத்தில் இந்தியா 250 ரன்களாவது எடுக்குமா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில் களம் இறங்கிய ஹர்பஜன் சிங்கும், ஜாகிர்கானும் சேர்ந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சை அடித்து நொறுக்கி ரன் குவிக்க ஆரம்பித்தனர்.
ஹர்பஜன் சிங் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். 54 ரன்கள் எடுத்த அவர் ஷான் வாட்சன் பந்தில் ஆட்டமிழந்தார். ஹர்பஜனும், ஜாகிர்கானும் இணைந்து 80 ரன்களைச் சேர்த்தனர்.
பேட்ஸ்மென்களை எளிதில் வீழ்த்திய ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களால் இந்த இரு பவுலர்களையும் பிரிக்க பெரும் கஷ்டப்பட்டு விட்டார்கள்.
மறு முனையில் ஜாகிர்கான் சிறப்பாக ஆடி 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று காலை இந்தியா தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. 35 ரன்களோடு களத்தில் இருந்த ஜாகீர்கான் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இன்று காலை இந்தியா 47 ரன்களை எடுத்தது. இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 360 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியா, இந்தியா வைவிட 70 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது. வாட்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னர் ஆஸ்திரேலிய அணி ஆட தொடங்கியது.
மதிய உணவு இடைவெளியின் போது விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் எடுத்திருந்தது.