இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு

பிரிஸ்பேன்: ஹோபர்ட்டில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் மீது முட்டை வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு வருகை தரும் ஆசிய கிரிக்கெட் அணியினர் அவமானப்படுத்தப்படுவது தொடர் கதையாகி விட்டது. ஏற்கனவே முரளீதரன் ஆஸ்திரேலியாவில் பலமுறை அவமானப்படுத்தப்பட்டுள்ளார். சமீபத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மீது இனவெறி சர்ச்சையைக் கிளப்பியது ஆஸ்திரேலியா.
இந்த நிலையில் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் பங்கேற்க வந்துள்ள இலங்கை அணி மீண்டும் ஆஸ்திரேலிய ரசிகர்களிடமிருந்து அவதூறை சந்தித்துள்ளது.
ஹோபர்ட் நகரில் இலங்கை வீரர் முரளீதரன் மீது சில ரசிகர்கள் முட்டையை வீசி அசிங்கப்படுத்தினர்.
இதையடுத்து இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை அணி கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்குக் கோரிக்கை விடப்பட்டது.
இதையடுத்து இலங்கை அணிக்கு தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த சம்பவம் தங்களைப் பாதிக்கவில்லை என்று இலங்கை அணியின் பயிற்சியாளர் டிரெவர் பைலிஸ் கூறியுள்ளார். இதுகுறித்து பைலிஸ் கூறுகையில், வியாழக்கிழமை நடந்த சம்பவத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இது சில விஷமிகளின் வேலை. இதுபோன்ற செயல்கள் ஆஸ்திரேலியாவில் நடப்பது சகஜமான ஒன்றுதான். முட்டாள்களின் இந்த செயலால் நாங்கள் பாதிப்படைய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் முரளீதரனை மட்டும் குறி வைத்து இது நடந்தததாகவும் நாங்கள் கருதவில்லை என்றார் அவர்.
இலங்கை அணிக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் பீட்டர் யங் கூறுகையில், இலங்கை அணிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இலங்கை அணி நிர்வாகத்துடன் நாங்கள் பேசியுள்ளோம். வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்காக வாரியம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது என்றார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:10 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications