
முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான முறையில் பிட்ச்சை அமைக்க வேண்டும் என்று கூறி பலரின் திட்டுக்களை வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார் டோணி. குறிப்பாக ஈடன் கார்டன் மைதான பிட்ச் கியூரேட்டர் பிரபீர் செளத்ரி ஒரு படி மேலே போய், டோணி நிலவைக் கேட்டால் உடனே தூக்கிக் கொண்டு வந்து கொடுப்பார்களா என்று கோபமாக கேட்டிருந்தார்.
இந்த விமர்சனங்கள் குறித்து தற்போது டோணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுகுறித்தெல்லாம் நான் கவலைப்படவில்லை. மற்றவர்களுக்கு கருத்து தெரிவிக்க இருக்கும் வசதியைப் போல எனக்கு எந்த வசதியும் இல்லை. நான் டிவி வர்னணையாளரும் கிடையாது, நானும் பதிலுக்கு எனது கருத்துக்களைச் சொல்வதற்கு. நான் எந்தப் பத்திரிக்கையிலும் விமர்சனக் கட்டுரையும் எழுதுவதில்லை.
விமர்சனமும் கிரிக்கெட்டில் ஒரு பகுதிதான். குறிப்பாக இந்திய கிரிக்கெட் என்றால் கூடவே விமர்சனமும் வந்து நிற்கும். நீங்கள் நன்றாக விளையாடும்போது நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். ஆனால் நீங்கள் சரியாக விளையாடாவிட்டால் கூடவே திட்டுக்களையும் வாங்க நேரிடும்.
அதேபோல கேப்டன் பொறுப்புடன் கூடவே நெருக்கடிளும், கட்டாயங்களும் இருக்கத்தான் செய்யும். ஒரு அணியை 3 - நான்கு வருடங்களுக்கு தலைமை தாங்கிச் செல்வது என்பது கடுமையான நெருக்கடியான வேலைதான். நாணயத்தின் இருபக்கத்தைப் போலத்தான் இதுவும் என்றார் டோணி.