
ஆண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து உலக சாதனைகளை படைத்து வருபவர் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட இவர், புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.
இந்த நிலையில் உசைனுக்கு தற்போது ஒரு விசித்திரமான ஆசை ஏற்பட்டுள்ளது. அது வேறு ஒன்றுமில்லை. அவருக்கு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமாம்.
இது குறித்து ஜமைக்கா தடகள வீரர் உசைன் போல்ட் கூறியதாவது:
கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். இதிலும் டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகள் என்றால் நான் பார்க்க தவறுவது இல்லை. ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் தொடரில் முடிந்த வரை அனைத்து போட்டிகளையும் பார்ப்பது உண்டு.
ஐபிஎல் தொடரில் விளையாட ஒரு வாய்ப்பு கிடைத்தால், நான் நிச்சயம் விளையாடுவேன். இந்தியாவில் கூட எனக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
ஜமைக்காவில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் வகையில், நான் கிரிக்கெட் போட்டி ஒன்றில் கலந்து கொண்டேன். அதில் எதிரணி வீரராக வந்தவர் ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக ஜொலிக்கும் கிறிஸ்கெய்ல். ஆனால் நான் வீசிய பந்தில் அவர் அவுட்டாகிவிட்டார் என்றார்.
உசைன் போல்ட் பெயருக்கு ஏற்றார் போல, பந்துவீசி 'போல்டு' செய்வதில் திறமையானவர் தான் போலிருக்கு.