டெல்லி: என்னை யாருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தவறாகவே புரிந்து கொண்டுள்ளனர் என்று இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் என்ற பெருமை கொண்ட சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்தியாவின் பவர்புல் கேப்டன் என்ற பெருமையைக் கொண்டவர் கங்குலி. நேற்று முடிந்த நாக்பூர் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் கங்குலி.
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 40 சதவீத சராசரியைக் கொண்டவர் கங்குலி.
தனது ஓய்வு குறித்து செய்தியாளர்களிடம் கங்குலி பேசுகையில், என்னை அனைவருமே சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தவறாகவேப் புரிந்து வைத்துள்ளனர்.
ஆடுகளத்தில் நான் எப்படி இருப்பேனோ, அதேபோலவே ஆடுகளத்திற்கு வெளியேயும் இருப்பேன் என பலரும் நினைத்து விட்டனர். ஆனால் ஆடுகளத்தை விட்டு வெளியே வந்து விட்டால் நான் வேறு மனிதனாகத்தான் இருப்பேன்.
ஆடுகளத்தில் நான் செயல்பட்ட விதம் அனைத்துமே இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டும். கிரிக்கெட் உலகில் இந்தியா முன்னணிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் செய்தவைதான். அதில் நான் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றேன்.
உலக கிரிக்கெட் வரைபடத்தில் இந்தியாவை பிரதான இடத்தில் இடம் பெற வைக்க வேண்டும் என்று நான் போராடினேன். அதை நான் கடமையாகவும் நினைத்தேன்.
எனவேதான் அதற்காக எதையும் செய்ய நான் தயாராக இருந்தேன்.
டோணியின் செயல்பாடுகள் என்னைப் போலவே இருக்கிறது. கேப்டன் பொறுப்பை மிகச் சிறப்பாக செய்கிறார் டோணி. அவரைப் பார்க்கும்போது என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டை அவர் சிறப்பான பாதையில் முன்னெடுத்துச் செல்வார் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஓய்வு பெற இப்போதுதான் சரியான நேரம் என நினைத்தேன். எனவேதான் ஓய்வு பெறுகிறேன். இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல்லுக்காக ஆடுவேன். பெங்கால் அணிக்காகவும் விளையாட வேண்டும். 13 வருடங்களாக ஆடி வருகிறேன். முழுமையாக எப்போது கிரிக்கெட்டை நிறுத்துவேன் என்று உறுதியாகத் தெரியவில்லை, பார்க்கலாம் என்றார் கங்குலி.