டெல்லி: முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் இருந்து கங்குலி, டிராவிட், லட்சுமண் ஆகியோர் நீக்கப்பட்டது குறித்த சர்ச்சையில் நான் தலையிடமாட்டேன் என்று மத்திய அமைச்சரும், பி.சி.சி.ஐ. தலைவருமான சரத்பவார் கூறியுள்ளார். ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா நாடுகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் இருந்து, தற்போது டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் முன்னணி வீரர்களான கங்குலி, டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரை இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு அதிரடியாக நீக்கியது. கிரிக்கெட் வாரியத் தேர்வு குழுவினரின் இந்த முடிவுக்கு, மூத்த வீரர்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சவுரவ் கங்குலி நீக்கப்பட்டது தான் அதிக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பீல்டிங் சரியாக செய்யாததே காரணம் எனக் கூறப்பட்டுள்ளதாம். இதற்கிடையில் மத்திய அமைச்சரும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சரத்பவார் கூறியுள்ளதாவது, தேர்வு குழுவினரை தேர்வு செய்தது பிசிசிஐ தான். இதனால் அவர்கள் எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். 20-20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கங்குலி, டிராவிட், சச்சின் ஆகியோர் இல்லை என்றாலும் நாம் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றினோம். டெஸ்ட் போட்டிகளில் நீக்கப்பட்ட வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். ஆனால் டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, 20-20 ஓவர் போட்டிகள் அனைத்தும் வேறுபட்டவை. எனவே கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்தது குறித்து தேர்வுக் குழுவினரின் முடிவுகளில் எக்காரணம் கொண்டும் பிசிசிஐ தலையிடாது என்றார் சரத் பவார்.