பாகிஸ்தானில் எழுந்துள்ள பாதுகாப்பு நெருக்கடிகள் காரணமாக சர்வதேச அணிகள் விளையாடத் தயங்குவதால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியை அக்டோபர் வரை தளளி வைத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்.
8 முன்னணி நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் 12-ம்தேதி தொடங்கி 28-ம் தேதிவரை பாகிஸ்தானில் நடக்கவிருந்தன.
ஆனால் பாகிஸ்தானில் தங்களுக்குப் போதிய பாதுகாப்பு இருக்குமா என ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் சந்தேகமெழுப்பின. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணி, இப்போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துவிட்டது.
இதனால் ஏற்பட்ட நெருக்கடி சூழல் குறித்து ஆலோசிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் நேற்று கூடியது.
இதில் பாகிஸ்தானில் தற்போது எழுந்துள்ள பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் அதனால் கவுன்சிலின் உறுப்பு நாட்டு அணிகள் அடைந்துள்ள கவலை குறித்து விவாதிக்கப்பட்டது.
போட்டியை நடத்தும் பொறுப்பிலிருந்து பாகிஸ்தானை விடுவித்து, வேறு நாட்டுக்கு அதைத் தரலாமா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் அதற்கான அவகாசம் போதுமானதாக இல்லை என்றும், இந்தப் போட்டிகளை உலகத்தரத்துடன் நடத்துவது மிக முக்கியம் என்பதால் அதற்கான அவகாசத்தை போட்டி நடத்தும் நாட்டுக்குத் தரவேண்டும் என்றும் ஐசிசி தலைவர் தெரிவித்தார்.
பின்னர் அடுத்த அக்டோபர் வரை போட்டிகளைத் தள்ளிப் போட்டுவிட்டு, பாகிஸ்தானிலேயே அவற்றை நடத்துவதென்று ஐசிசி ஒருமனதாகத் தீர்மானித்துள்ளது.