காலே: ஷேவாக், கம்பீர், வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சரிவர ஆடாததால் காலே டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு சுருண்டது. ஷேவாக் சிறப்பாக ஆடி இரட்ைட சதம் போட்டார். இலங்கையை தனது அபார பந்து வீச்சால் கட்டுப்படுத்தினார் ஹர்பஜன் சிங்.
காலே நகரில் 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. கேப்டன் கும்ப்ளே டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். வீரேந்திர ஷேவாக்கும், கெளதம் கம்பீரூரும் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் டெஸ்ட்டில் சொதப்பிய வீரேந்திர ஷேவாக் இப்போட்டியில் வீறு கொண்டெழுந்தார்.
தொடக்கம் முதலே அடித்து விளையாடிய அவர் புயல் வேகத்தில் ரன்களைக் குவித்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ஷேவாக் 201 ரன்களைக் குவித்தார். முன்னதாக கம்பீர் 56 ரன்களை எடுத்தார்.
முதல் டெஸ்ட்டில் நிலைகுலைய வைத்த முரளிதரனையும், மெண்டிஸையும், ஷேவாக் ஓட ஓட விரட்டினார். இருவரது பந்துகளையும் அனாயசமாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தார்.
முன்னணி வீரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் இந்தியாவால் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போய் விட்டது.
ஆனால் ஷேவாக்கும், லட்சுமணும் சேர்ந்து பொறுப்பாகஆடினர். லட்சுண் 39 ரன்களை சேர்த்து அவுட் ஆனார்.
நேற்றையஆட்ட நேர இறுதியில், 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களுடன் இந்தியா இருந்தது. ஷேவாக் 113 ரன்களும், லட்சுமண் 2 ரன்களும் எடுத்திருந்தனர்.
இன்று தொடர்ந்த ஆட்டத்தில் இந்திய விக்கெட்கள் விரைவாக சரியத் தொடங்கின. அஜந்தா மெண்டிஸின் பந்து வீச்சுக்கு இந்திய வீரர்கள் மளமளவென சரிந்தனர்.
6 விக்கெட்களை வீழ்த்தி இந்தியா பெரிய ஸ்கோரை எட்டி விடாமல் பார்த்துக் கொண்டார் மெண்டிஸ். முத்தையா முரளிதரனுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தது. வாஸ் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இறுதியில், இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து இலங்கை விளையாடத் தொடங்கியது.
ஹர்பஜன் அபாரம்:
இந்தியாவின் ஸ்கோரை விரைவாக தாண்டி விடும் வகையில், இலங்கை வீரர்களின் தொடக்க ஆட்டம் அமைந்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் வான்டார்ட் 4 ரன்களில் வீழ்ந்தாலும், இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான வர்னபுரா சிறப்பாக விளையாடினார். 66 ரன்களை இவர் குவித்தார்.
மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான சங்கக்காரா 68 ரன்களை சேர்த்தார். பெரிய ஸ்கோரை எட்டி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர்கள் இருவரையும் ஹர்பஜன் சிங் தனது மாயாஜால பந்து வீச்சால் அவுட் செய்தார்.
தொடர்ந்து வந்த கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே நிதானமான ஆட்டத்ைத வெளிப்படுத்தினார். இருப்பினும் சமரவீரா (14), தில்ஷான் (0) ஆகியோரை ஹர்பஜன் சிங் வெளியேற்றியதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஹர்பஜன் சிங்கின் அபார பந்து வீச்சால் இலங்கையின் ரன் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. வேகமாக அடித்து ஆட முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.
ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களை எடுத்திருந்தது. மஹிளா ஜெயவர்த்தனே 46 ரன்களுடனும், பிரசன்னா ஜெயவர்த்தனே 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்தியாவின் சார்பில் ஹர்பஜன் சிங் 4 விக்கெட்களையும், ஜாகிர்கான் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.