தெ. ஆப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை சமன் செய்தது இந்தியா

இந்திய- தென்ஆப்பிரிக்க அணிகளுக்கிடையே 3 டெஸ்ட் போட்டி தொடரில் 1-0 என்றநிலையில் தெ.ஆப். அணி முன்னிலையில் இருந்தது.
3வது மற்றும் கடைசி டெஸ்ட் கான்பூரில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 265 ரன்கள் எடுத்து அவுட்டானது. 2வது இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா முதல் இன்னிங்சில் 325 ரன்களை எடுத்தது. இதனால் இரண்டாவது இன்னிங்சில் 62 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த அகமதாபாத் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் 90 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா இந்தியாவை தோற்கடித்து பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டம் முடிய ஒருமணிநேரம் இருக்கையில் அதிரடியாக 62 ரன்களை குவித்தால் 2 நாள் ஆட்டத்தை மிச்சம் செய்வதோடு இந்த வெற்றி ஓர் ஆறுதலான பழிவாங்கலாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதினர்.
அதேசமயத்தில், அகமதாபாத் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் 4 இந்திய வீரர்களை தென் ஆப்பிரிக்க பௌலர்கள் 'முட்டை' போடச் செய்தார்கள் அல்லவா? அதேபோல இந்த ஆட்டத்தில் 4 தென்ஆப்பிரிக்க வீரர்களை இந்திய வீரர்கள் 'முட்டை' போடச் செய்ததால் ரசிகர்களின் பழிதீர்க்கும் ஆர்வம் மேலும் அதிகரித்தது.
இந்தநிலையில், இந்தியாவின் 2வது இன்னிங்ஸை வாசிம் ஜாபரும், வீரேந்திர சேவாக்கும் தொடங்கினர். முதல் ஓவரிலேயே ஸ்டெயின் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியை அடித்து ஆர்வத்தை அதிகரிக்கச் செய்தார் ஜாபர். நிடினி வீசிய அடுத்த ஓவரில் சேவாக்கும் ஜாபரும் தலா ஒரு பவுண்டரியை எடுத்தனர். ஸ்டெய்ன் வீசிய 3வது ஓவரில் சேவாக் ஒரு பவுண்டரி எடுத்தார்.
இதனால் ஆட்டம் விறுவிறுப்படையத் தொடங்கியது. இந்திய வீரர்களின் அதிரடியை தடுப்பதற்காக பந்து வீச்சில் மாற்றம் செய்தார் கேப்டன் ஸ்மித். ஸ்டெயினுக்கு பதில் ஹாரிஸ் பந்து வீசினார். அவரது முதல் 2 பந்துகளில் அடுத்தடுத்து சேவாக் 2 சிக்ஸர்களை அடித்தார்.
உற்சாகத்தில் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் குஷியாகிப்போன சேவாக் 3 வது பந்தை இறங்கி வந்து ஆட முற்பட்டபோது பேட் விளிம்பில் பந்து பட்டு பாயிண்டில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 11 பந்துகளில் அவர் 22 ரன்களை எடுத்திருந்தார்.
இன்னும் 30 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மறு ஓவரில் ஜாபரை மோர்கெல் எல்பிடபிள்யூ செய்து அவுட்டாக்கினார். இறுதியாக 3வது விக்கெட்டுக்கு திராவிட்டும் ஜோடி சேர்ந்து விளையாடினர். இந்திய ஸ்கோர் 60 ரன் ஆக இருந்தபோது ஒரு பவுண்டரியை அடித்து வெற்றியைத் தேடித் தந்தார் திராவிட்.
கங்குலி 13 ரன்களுடனும், திராவிட் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் கங்குலி
ஆட்டநாயகனாக கங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொடர் நாயகனாக ஹர்பஜன்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு டாடா சுமோ கிராண்ட் கார் பரிசாக வழங்கப்பட்டது.
முன்னதாக, மூன்றாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியபோது, ஸ்ரீசாந்த் 9 ரன்களுடனும் இஷாந்த் சர்மா ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
கடைசி விக்கெட் ஜோடிக்கு 46 ரன்களை குவித்த நிலையில் ஹாரிஸ் பந்து வீச்சில் பிரின்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவர் 44 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசி 29 ரன்களை எடுத்தார். இஷாந்த் சர்மா ஆட்டமிழக்கவில்லை. அவர் 38 பந்துகளில் 2 பவுண்டரிகளை குவித்து 14 ரன்கள் எடுத்திருந்தார்.
முந்தைய 2 டெஸ்ட் மேட்சுகள் போல் இல்லாமல் கடைசி விக்கெட்டுக்கு உறுதியாகவும் நிதானமாகவும் விளையாடிய இந்த ஜோடியால் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் வெறுப்படைந்தனர். முன்னதாக ஸ்டெயின் வீசிய பந்தை ஸ்ரீசாந்த் அடித்தபோது கேப்டன் ஸ்மித் கேட்ச் பிடித்தார். ஆட்டம் முடிந்தது என்ற நினைத்தபோது அந்த பந்தை 'நோ-பால்' என்று கூறியதால் கடுப்பாகிவிட்டனர்.
இறுதியாக 60 ரன்கள் கூடுதலாக எடுத்த நிலையில் இந்திய அணி 325 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க இரண்டாவது இன்னிங்ஸை துவக்க ஆட்டக்காரர்கள் மெக்கன்சியும், கேப்டன் ஸ்மித்தும் தொடங்கினர். 14 ரன்கள் எடுத்திருந்த மெக்கன்சியை ஸ்ரீசாந்த் எல்பிடபிள்யூ செய்து அவுட்டாக்கினார்.
ஸ்மித் 10 ரன்கள் எடுத்திருந்தார். முதல் விக்கெட் 26 ரன்னுக்கு விழுந்தது.
அடுத்துவந்த ஹாஷிம் அம்லாவை ஹர்பஜன் பந்து வீச்சில் ஜாபரிடம் கேட்ச் கொடுத்து 'டக்' அவுட்டானார்.
2 முக்கிய தென் ஆப்பிரிக்கா வீரர்களை அடுத்தடுத்து அவுட்டாக்கியதால் ஆட்டம் பரபரப்பு அடைந்துள்ளது. இதனிடையே நின்று விளையாடிய கேப்டன் ஸ்மித்தை 35 ரன்களில் சேவாக் போல்டு செய்தார். அடுத்ததாக 15 ரன்களை குவித்த ஜாக் காலிஸ் விக்கெட்டையும் சேவாக் வீழ்த்தினார்.
இதையடுத்து 5வது விக்கெட்டுக்கு பிரின்ஸும், டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்து ஆடினர். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஹர்பஜன் பந்துவீச்சி்ல டிவில்லியர்ஸ் அவுட்டானார். அவர் 15 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது ஸ்கோர் 90/5.
இதையடுத்து தென்ஆப்பிரிக்க விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. பௌச்சர் 5 ரன்கள் எடுத்து அவுட்டானார். வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டெயின், ஹாரிஸ், நிடினி ரன் எடுக்காமல் 'முட்டை' போட்டு வெளியேறினர். இந்தநிலையில் 55.5 ஓவர்களில் 121 ரன்களில் தென் ஆப்பிரிக்கா ஆல்அவுட் ஆனது.
ஹர்பஜன் 44 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வீரேந்திர சேவாக் அபாரமாக பந்து வீசி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறித்தார். இஷாந்த் சர்மா 2, ஸ்ரீசாந்த் 1 விக்கெட்டுளையும் வீழ்த்தினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:19 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications