கராச்சி: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
ஆசியக் கோப்பையின் இந்த ஆண்டு போட்டிகளை பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் 6 நாடுகள் பங்கேற்கின்றன. இரு பிரிவுகளைக் கொண்ட அணிகள் தங்களுக்குள் மோதும் லீக் ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நேற்று பி பிரிவு ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.
இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி துவக்கத்தில் நிதானமாக ஆடியது. ஆனால் அந்த அணியின் கேப்டன் ஷோயிப் மாலிக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பேற்ற பிறகு மாலிக் அடித்த முதல் சதமாகும் இது. பாகிஸ்தான் அணி தனது ரன்களை குவிக்க அவரது சதம் உதவி புரிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது.
300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதலே சிறப்பாக ஆடியது. கவுதம் காம்பீர் 9 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் வீரேந்திர ஷேவாக்கும், அவருடன் ஜோடி சேர்ந்த சுரேஷ் ரைனாவும் பாகிஸ்தான் வீசிய பந்துகளை பவுண்டரிகளாகவும், சிக்சர்களாகவும் விளாசினார்கள்.
வீரேந்திர ஷேவாக் 95 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 119 ரன்கள் எடுத்தார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய சுரேஷ் ரைனா 69 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். இரு வீரர்களும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு ஜோடியாக 198 ரன்களை குவித்தனர்.
யுவராஜ் சிங் 48 ரன்களும், கேப்டன் டோனி ஆட்டமிழக்காமல் 26 ரன்களும் எடுத்தனர்.
இதன் மூலம் 42.1 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 301 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
கடந்த 1988 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆசியக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா இப்போதுதான் வீழ்த்தியிருக்கிறது.