4வது போட்டியில் வெற்றி - தொடரை வென்றது இந்தியா
குவாலியர்: பாகிஸ்தான் அணிக்கு எதிராக குவாலியரில் நடந்த 4வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று ஒரு நாள் தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றது.குவாலியரில் உள்ள கேப்டன் ரூப் சிங் ஸ்டேடியத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4வது ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்தியா வென்றால் ஒரு நாள் போட்டித் தொடரை வெல்ல முடியும் என்பதால் ரசிகர்கள் இந்தப் போட்டியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் மளமளவென்று ஆட்டமிழந்ததால் தடுமாறிய பாகிஸ்தான் அணி முகம்மது யூசப், யூனிஸ்கானின் ஆட்டத்தால் நிலையானது. யூசுப் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 255 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது.
பின்னர் ஆடத் தொடங்கிய இந்தியா சச்சினின் அபார ஆட்டத்தால் வெற்றி இலக்கை எளிதாக தொட்டது. சச்சின் கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். முதலில் நிதானமாகவும், பின்னர் அதிரடியாகவும் ஆடிய அவர் 97 ரன்களில் யாரும் எதிர்பாராத வகையில் ஆட்டமிழந்து சதத்தைத் தவற விட்டார்.
கடந்த ஜூன் 26ம் தேதி முதல் சதத்தை சொற்ப ரன்களில் சச்சின் தவற விடுவது இது 6வது முறையாகும். இதில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 முறையும் (99, 93), இங்கிலாந்துக்கு எதிராக 2 முறையும் (99, 94), நடப்பு பாகிஸ்தான் தொடரில் இரு முறையும் (99 (மொஹாலி), 97) சச்சின் சதத்தை தவற விட்டுள்ளார். கடைசியாக அவர் ஜனவரி 31ம் தேத மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக வடோடராவில் நடந்த போட்டியில்தான் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்குலி (5), காம்பீர் (3) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த சமயத்தில் சச்சின் நிலைத்து ஆடியதால் இந்தியாவின் வெற்றி இலக்கு எளிதானது.
சச்சினுக்குப் பின்னர் கேப்டன் டோணியும், யுவராஜ் சிங்கும் சிறப்பாக ஆடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றனர். யுவராஜ் சிங் சிறப்பாக ஆடி 53 ரன்களை எடுத்தார். டோணி 45 ரன்களை எடுத்தார். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 101 ரன்களைச் சேர்த்தனர்.
இறுதியில் 21 பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்தியா 5 விக்கெட்களை மட்டும் இழந்து 260 ரன்களை எடுத்து வெற்றியைப் பெற்றது. சச்சின் டெண்டுல்கர் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்ற பின்னர் மகேந்திர சிங் டோணிக்குக் கிடைத்திருக்கும் முதல் தொடர் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசிப் போட்டி வருகிற 18ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறவுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications