கான்பெரா: பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் துவக்க ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை 57 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து அசத்தியது. இப்போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஐசிசி பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் துவங்கியது. உலகின் எட்டு முன்னணி பெண்கள் அணிகள் பங்கேற்கும் இதில் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பி பிரிவில் இடம்பிடித்துள்ளன.
ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.
இன்று பிராவல் நகரில் நடந்த துவக்க போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள திணறியது. வீராங்கனைகள் ஒருவர் பின்னர் ஒருவராக வரிசையாக பெவிலியன் திரும்பினர். பாகிஸ்தான் அணி 29 ஓவரில் 57 ரன்களுக்கு சுருண்டது.
சூப்பராக பந்துவீசிய இந்திய வீராங்கனை ரூமிலி தார் 8 ஓவர்கள் வீசி 7 ரன் மட்டுமே விட்டுகொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். அமிதா ஷர்மா, பிரியங்கா ராய் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து விளையாடிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 10 ஓவரில் 58 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அனாகா தேஸ்பான்டே 26, அஞ்சும் சோப்ரா 17 ரன்கள் எடுத்தனர்.
கான்பெராவில் நடந்த மற்றொரு போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 277 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இலங்கை 177 ரன்கள் எடுத்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய பெண்கள் அணி வரும் 10ம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.