பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
கவுகாத்தி: இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கவுகாத்தியில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று கவுகாத்தி, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சல்மான்பட்டும், கம்ரான் அக்மலும் இறங்கினார்கள். ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே இர்பான் பதானில் பந்து வீச்சில் கம்ரான் அக்மல் எல்.பி.டபிள்யூ ஆனார்.
அதன் பின்னர் மெதுவாகவே விளையாடிய பாகிஸ்தான் அணியினர் இறுதியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழந்து 239 ரன்கள் எடுத்தனர். இதில் சல்மான் பட் 50 ரன்கள் எடுத்தார். முகம்மது யூசுப் கடைசி வரை அவுட்டாகாமல் 82 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணிய தரப்பில் டெண்டுல்கர் 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான், இர்பான் பதான், ஹர்பஜன்சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இரண்டு விக்கெட்டுகள் ரன்-அவுட் ஆயின.
வெற்றிக்கு 240 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கியது இந்தியா. துவக்க ஆட்டக்காரர்களாக கங்குலி-சச்சின் இறங்கினர். ஆனால் சச்சின் 4 ரன்களிலேயே எல்.பி.டபிள்யூ ஆனார்.
அடுத்து களமிறங்கிய கவுதம் காம்பிர், கங்குலியுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். இந்நிலையில் கங்குலி 40 ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் கேப்டன் டோணி களமிறங்கிய சிறிது நேரத்தில் காம்பிர் 44 ரன்கள் எடுத்து, அப்ரிதியின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் துணைகேப்டன் யுவராஜ் சிங், டோணியுடன் சேர்ந்து பொறுமையாக விளையாடினார்.
இருவரும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியின் விளிம்புக்கு அழைத்து சென்ற நிலையில் டோணி 63 ரன்கள் எடுத்த நிலையில் அக்தரின் பந்துவீச்சில் அவுட்டாகிவிட்டார்.
அதன்பின்னர் யுவராஜ் சிங் 58 ரன்கள் எடுத்து அப்துர் ரஹ்மானின் பந்து வீச்சில் அப்ரிதியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அப்போது இந்திய அணியின் ரன்கள் 225. வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில் ராபின் உத்தப்பாவும், இர்பான் பதானும் சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.
இறுதியில் இந்திய 47 ஓவர்களில் 242 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது.
பாகிஸ்தான் அணியின் அக்தர் 2 விக்கெட்டுகளையும் அப்ரிதி, அப்துர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக 77 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5 போட்டிகள் கொண்ட இந்த ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:31 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications