காலே: கொழும்பு டெஸ்ட் போட்டியில், முத்தையா முரளீதரன், அஜந்தா மெண்டிஸ் சுழற் பந்து வீச்சில் சுருண்ட இந்தியா, நாளை காலேவில் தொடங்கவுள்ள 2வது டெஸ்ட் போட்டியில் அவர்களை சமாளித்து அசத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
இலங்கை சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் கொழும்பில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், மகா மோசமாக ஆடி தோல்வியைத் தழுவியது.
முத்தையா முரளீதரன் மற்றும் மெண்டிஸ் ஆகியோரது சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நமது வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பியவண்ணம் இருந்தனர்.
குறிப்பாக முரளீதரனின் பந்து வீச்சை நம்மவர்களால் சுத்தமாக எதிர்கொள்ள முடியாமல் போனது. அனுபவம் வாய்ந்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோர் மொத்தமாக சேர்ந்து 100 ரன்களைக் கூட சேர்க்க முடியாமல் போனது ரசிகர்களை அதிர வைத்தது.
இந்த நிலையில் காலே நகரில் நாளை 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்த மைதானம் சும்மாவே சுழற் பந்து வீச்சுக்கான மைதானமாகும். இதில் இதுவரை முரளீதரனின் மாயாஜாலம் மட்டுமே கலக்கி வந்தது.இந்த நிலையில் தற்போது மெண்டிஸும் இணைந்திருப்பதால் இந்தியாவின் பாடு படு திண்டாட்டமாகவே இருக்கும் என அஞ்சப்படுகிறது.
டாஸ் வெல்லும் அணியே முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்கும். அப்போதுதான் ரன்களைக் குவிக்க முடியும். எனவே டாஸ் வெல்வது முக்கியமான ஒன்று.
கொழும்பை விட மோசமான முறையில் இந்த போட்டி இருக்கும் என இலங்கை கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே எச்சரித்துள்ளார். எனவே இந்திய வீரர்கள் அதற்கேற்ற வகையில் தயாராகி வருகின்றனர். 2வது டெஸ்ட்டில் மீண்டு விடுவோம் என கெளதம் கம்பீர், கும்ப்ளே ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்திய அணித் தரப்பில் ஒரு பேட்ஸ்மேனை கட் செய்து விட்டு அவருக்குரப் பதில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவை கொண்டு வரலாமா என்ற சிந்தனையில் இந்திய அணி நிர்வாகம் உள்ளதாம்.
வழக்கம் போல மூத்த வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண், ஷேவாக் ஆகியோரைத்தான் இந்தியா நம்பியுள்ளது. முதல் போட்டியில் சொதப்பிய இவர்கள் (லட்சுமணைத் தவிர) இந்தப் போட்டியிலாவது கிளப்புவார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
முன்னணி மட்டையாளர்களுக்கு காலே டெஸ்ட் ஒரு ஆசிட் டெஸ்ட் என்பதில் சந்தேகம் இல்லை.