பாங்காக்: பெண்களுக்கான ஜூனியர் ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில், இலங்கைக்கு எதிரான போட்டியில், இந்திய அணி 16 கோல்களை அடித்து அபார வெற்றிப் பெற்றது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பெண்களுக்கான 6வது ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற குரூப் ஏ பிரிவை சேர்ந்த இந்தியா, இலங்கை அணிகள் மோதின.
போட்டி துவங்கிய 6வது நிமிடத்தில் இந்தியாவின் நவநீத் குர் முதல் கோலை அடித்தார். அடுத்த 3 நிமிட இடைவெளியில் வந்தனா, அனுபா ஆகியோர் அடுத்தடுத்து கோல் அடித்தனர். இந்திய அணியின் துணை கேப்டன் பூனம் 17வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னரை பயன்படுத்தி ஒரு கோலை அடித்தார்.
போட்டியின் இறுதியில் இந்திய அணியை சேர்ந்த பூணம் ராணி, ரிது ராணி, வந்தனா கதாரியா, அனுபா பார்லா தலா 3 கோல்களை அடித்து அசத்தினர். மேலும் நவநீத் கவுர், லில்லி சாணு மயங்பாம், சுஷிலா சாணு, தீப் எக்கா கிரேஸ் தலா ஒரு கோல் அடித்தனர். முடிவாக இந்திய அணி தரப்பில் 16 கோல் அடிக்கப்பட்டது.
ஆனால் இலங்கை அணியினர் கடுமையாக போராடியும், கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. இந்திய அணிக்கு நேற்று கிடைத்த 15 பெனால்டி வாய்ப்புகளில் 5 கோல்கள் அடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிப் பெற்றது.