ஹாமில்டன்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாளை துவங்குகிறது. நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்த டோணி தலைமையிலான இந்திய அணி 41 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் தொடரையும் வென்று சாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டோணி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வெற்றிகளை குவித்து வருகிறது. சமீபத்தில் நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதித்தது.
பவுன்சர் ஆடுகளம்...
இதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பமாகிறது. முதல் போட்டி ஹாமில்டனில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் ஷேவாக், சச்சின் என இந்திய பேட்ஸ்மேன்களின் விளாசல் ஆட்டத்தை கண்டு பயந்து போன நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பவுலர்களுக்கு சாதகமான பவுன்சர் ஆடுகளங்களை தயார் செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியம். சச்சின், டிராவிட், லட்சுமண் என அனுபவ வீரர்கள் அதிகமிருப்பதால் நியூசிலாந்தின் அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்களை எளிதில் சமாளித்துவிடலாம் என இந்திய அணியினர் நம்புகின்றனர்.
ஷேவாக், கம்பீர் மீண்டும் ஆட்டத்தை துவக்குவது அணிக்கு பலமான அஸ்திவாரத்தை அமைத்து கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆடுகளத்தில் பந்துகள் அதிகம் பவுன்சானால் அது நியூசிலாந்துக்கும் சிக்கல் தான் என்பதை மறுக்க முடியாது. கடந்த ஆண்டில் வேகப்பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காத இந்திய ஆடுகளங்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கதிகலங்க செய்த ஜாகிர், இஷாந்த் கூட்டணி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கும். மூன்றாவது வேகமாக தமிழக வீரர் பாலாஜி வருவது பலம்.
நியூசிலாந்து அணி அதிகம் அனுபவமற்றதாக உள்ளது. இந்த அணியில் இருக்கும் ரோஸ் டெய்லர் (14), ஜெசி ரைடர்(9), டிம் மெசின்டோஸ் (2), பிரன்டன் மெக்கலம் (41) என இந்த அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் விளையாடியுள்ள போட்டிகளின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 76 மட்டுமே. இது சச்சன் (156) விளையாடிய போட்டிகளில் பாதி கூட இல்லை.
மிரட்டும் வரலாறு...
இப்படி அனைத்தும் இந்திய அணிக்கு சாதகமாக இருந்தாலும் ஒன்று மட்டுமே நமது வீரர்களுக்கு லேசான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அது இந்திய அணியின் கடந்த கால வரலாறு தான். கடந்த 2002-03ல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 0-2 என பரிதாபமாக இழந்தது. இத்தொடரில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 219 என்பது அதைவிட பரிதாபமானது.
ஆனால், இம்முறை டோணியின் இந்திய அணி சாதிக்கும் என்ற சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை இந்தியர்களிடம் இருக்கிறது. கடைசியாக மன்சூர் அலி கான் பட்டோடி தலைமையிலான இந்திய அணி 1967-68ல் நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது. இதை அடுத்து ஒரு முறை கூட இந்திய அணியில் நியூசிலாந்தில் டெஸ்டிஸ் சாதிக்கவி்ல்லை. இந்த ஏக்கத்தை இந்திய அணி இம்முறை போக்கும் என எதிர்பார்க்கலாம்.