டெல்லி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது. 2வது போட்டியில் அபாரமாக வென்ற தெம்பில் இந்தியாவும், பதிலடி தர வேண்டும் என்ற இக்கட்டான நிலையில், ஆஸ்திரேலியாவும் நாளைய போட்டியை சந்திக்கவுள்ளன. பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்து வருகிறது. முதல் போட்டி டிராவில் முடிந்தது. மொஹாலியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதனால் ஆஸ்திரேலியா பெரும் அதிர்ச்சி அடைந்தது. இந்த பின்னணியில் நாளை 3வதுடெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது. பார்மில் உள்ள வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், இஷாந்த் சர்மா ஆகியோருக்கு டெல்லி உள்ளூர் மைதானமாகும். எனவே இருவரும் ரன்களை விளாசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கும்ப்ளேவுக்கு டெல்லி மைதானம் தான்10 விக்கெட்களைக் கொடுத்து உலக சாதனை படைக்க வழி வகுத்தது. இந்திய வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு மிகப் பெரிய தோல்வியைக் கொடுக்க முடியும் என்பதையும் நிரூபித்துள்ள தெம்புடன் உள்ளனர். அதேசமயம், ஆஸ்திரேலியர்களை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. எந்த நேரமும் அவர்கள் திருப்பித் தாக்குவார்கள் என இந்தியப் பயிற்சியாளர் கிர்ஸ்டன் இந்தியர்களை எச்சரித்துள்ளார். நாளைய போட்டியில் ஹர்ஜன் சிங் விளையாடுவார் என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அதேபோல, மொஹாலி போட்டியில் விளையாடாத கேப்டன் கும்ப்ளேவும் கவலை அளிப்பதாக உள்ளார். இருப்பினும் இருவரும் நாளைய போட்டியில் இடம் பெறுவார்கள். பெங்களூர் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அணியே நாளைய போட்டியிலும் விளையாடும் என கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். ஒரு வேளை கும்ப்ளே நாளைய போட்டியில் இடம் பெற்றால், மொஹாலி போட்டியில் 7 விக்கெட் எடுத்து அசத்திய அமித் மிஸ்ரா நீக்கப்படக் கூடும். பந்து வீச்சைப் பொறுத்தவரை சுழற்பந்து வீச்சில் ஹர்பஜன், கும்ப்ளே, அமீத் மிஸ்ரா ஆகியோர் உள்ளனர். வேகப் பந்து வீச்சில் ஜாகிர்கானும், இஷாந்த் சர்மாவும் மிரட்டிக்கொண்டுள்ளனர். பேட்டிங் வரிசையில் பெரிய மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது.அனைத்து வீரர்களுமே சிறப்பாக ஆடி வருகின்றனர். வி.வி.எஸ். லட்சுமண் மட்டும் பொறிந்து தள்ளாமல் உள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலியர்களும் தயாராகி வருகின்றனர். இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் சிங் பேடி, ஆஸி, சுழற்பந்து வீச்சாளர்களான கேமரூன் ஒயிட், ஜேசன் கிரெஜா ஆகியோருக்கு பல டிப்ஸ்களை அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவிந் அழைப்பின் பேரில் பேடி, டிப்ஸ் வழங்கி உதவி செய்துள்ளார். இவர்கள் இருவரும் இந்திய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடியைக் கொடுக்க முயற்சிக்கலாம். மொத்தத்தில் நாளைய போட்டி இந்தியர்களுக்கு தங்களது பலத்தை உறுதிப்படுத்தும் போட்டியாகவும், ஆஸ்திரேலியர்களுக்கு பதிலடி கொடுப்பதுமாகவும் இருக்கும் என்று நம்பலாம். வீரர்கள் இந்தியா - வீரேந்திர ஷேவாக், கெளதம் கம்பீர், ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண், எம்.எஸ்.டோணி, ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, ஜாகிர் கான், இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா. ஆஸ்திரேலியா - மாத்யூ ஹெய்டன், சைமோன் கேடிச், ரிக்கி பான்டிங், மைக்கேல் ஹூஸே, மைக்கேல் கிளார்க், ஷான் வாட்சன், பிராட் ஹாதின், மிட்சல் ஜான்சன், பிரட் லீ, ஸ்டூவர்ட் கிளார்க், கேமரூன் ஒயிட், ஜேசன் கிரெஜா.