சென்னை: இந்தியா - தென்ஆப்ரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று தென்ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் குவித்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்ஆப்ரிக்கா பேட்டிங் செய்ய துவங்கியது.
முதல் விக்கெட் ஜோடிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்களான நீல் மெக்கன்ஸியும், கேப்டன் கிரெய்ம் ஸ்மித்தும் 132 ரன்கள் குவித்தனர்.
மதிய உணவு இடைவெளிவரை 109 ரன்கள் குவித்த இந்த ஜோடி இந்திய பந்து வீரர்களின் பொறுமையை சோதித்துவிட்டது. கடந்த மாதம் வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் இந்த ஜோடி முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு 415 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் தொடர்ந்து ஆடியபோது ஸ்மித் 73 ரன்களை எட்டியநிலையில் இந்திய கேப்டன் கும்ப்ளே வீசிய பந்தை மிட்விக்கெட்திசையில் தூக்கியடித்தபோது லட்சுமணிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதற்கு முன்பாக ஸ்ரீசாந்த் வீசிய ஒரே ஓவரில் மூன்று பவுண்டர்களை அடித்து விளாசியிருந்தார் ஸ்மித்.
இரண்டாவது விக்கெட்டுக்கு மெக்கன்சியுடன் கூட்டுசேர்ந்த ஆம்லா ஜோடி அணிக்கு மேலும் 64 ரன்களை குவித்தது. நிதானமாக ஆடிய இந்த வீரர்களை அசைக்க முடியாமல் இந்திய பௌலர்கள் சோர்ந்துவிட்டனர்.
மூன்றாண்டுகளுக்குப்பிறகு அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ள மெக்கன்சி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னதாக ஹர்பஜன் வீசிய பந்தை மெக்கன்சி (94)அடித்தாட முயன்றார். ஆனால் பேட் விளிம்பில் பட்டு எகிறிய பந்தை திராவிட் கச்சிதமாக லபக்கினார்.
அடுத்து வந்த ஜாக் கால்லீஸ் 13 ரன்னில் ஹர்பஜன் வீசிய பந்தை கேட்ச் கொடுத்து அவுட்டான போது ஸ்கோர் 244-3 ஆக இருந்தது. இந்த கேட்சை வாசிம் ஜாபர் பிடித்தார்.
பின்னர் ஆம்லா, ஆஷ்வெல் பிரின்ஸ் ஜோடி சேர்ந்து 291 ரன்களை எட்டினர் . அப்போது கும்ப்ளே வீசிய பந்தை பிரின்ஸ் (23) எதிர்த்தாட அதை இடதுபுறமாக டைவ் அடித்து ரிட்டர்ன் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார் கும்ப்ளே.
ஆட்டநேர இறுதியில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் 304 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகளை இழந்திருந்தனர். இந்திய பந்து வீச்சாளர்கள் கும்ப்ளே, ஹர்பஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆம்லா 85 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 10 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.
துவக்கத்தில் இருந்தே இந்திய வீரர்களின் பந்துவீச்சை தென் ஆப்பிரிக்க வீரர்கள் அநாயாசமாக விளையாடினர். கும்ப்ளே வீசிய ஒரு ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகளை விளாசினார் மெக்கன்சி.
ஆட்டத்தின் முதல்பாதியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்ரீசாந்த் மற்றும் ஆர்.பி.சிங்கின் பந்துகளை ஸ்மித்தும் மெக்கன்சியும் வெளுத்து வாங்கிவிட்டனர்.
வெயில் அளவு 38 டிகிரியாக இருந்ததால் பீல்டிங் செய்த இந்திய வீரர்கள் களைப்படைந்து விட்டனர். காற்றின்பதம் 75 சதவீதம் இருந்ததால் எல்லோருக்கும் வியர்த்துக் கொட்டியது. இந்த நிலையில் இருவேளை டிரிங்ஸ் இடைவேளைக்கு அம்பயர்கள் அனுமதித்தனர்.