தம்புல்லா ஒரு நாள் போட்டி: இந்தியா படு தோல்வி

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒரு நாள் போட்டிகளில் இன்று முதல் போட்டி தம்புல்லா நகரில் நடந்தது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் அசத்திய வீரேந்திர ஷேவாக் காயம் காரணமாக இன்று அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதில் இளம் வீரர் விராத் கோலி சேர்க்கப்பட்டிருந்தார்.
இலங்கை தரப்பில் ஜெயசூர்யா அணியில் சேர்க்கப்பட்டார்.
பேட்டிங்கைத் தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 2 பந்துகளை மட்டுமே சந்தித்த கம்பீர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து விராத் கோலி 12 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சுரேஷ் ரெய்னா பந்துகளை சரமாரியாக சாப்பிட்டு (35), 17 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பி விட்டார்.
சற்றே நிலைத்து ஆட முயன்ற யுவராஜ் சிங்கும் 23 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியா நிலை தடுமாறியது.
ரோஹித் சர்மா 19, கேப்டன் டோணி 6, பதான் 7 என அடுத்தடுத்து இந்தியா விக்கெட்களைப் பறி கொடுத்தது.
இர்பான் பதான் 7 ரன்கள் சேர்த்தார். ஹர்பஜன் சிங்கின் பங்கு 12. ஜாகிர்கான் தன் பங்குக்கு 12 ரன்களை சேர்த்துக் கொடுத்தார்.
இறுதியில், ஓஜா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முனாப் படேல் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
46 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடித்த இந்தியா சேர்த்த ரன்கள் 146.
முரளிதரன், மெண்டிஸ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். குலசேகரா 2 விக்கெட்களையும், வாஸ், மிராண்டோ தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் எளிதான வெற்றி இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. அதிரடி வீரர்களான ஜெயசூர்யாவும் (10), சங்கக்காராவும் (19) வேகமாக ஆட்டமிழக்கவே, இந்தியாவுக்கு நம்பிக்கை பிறந்தது.
ஆனால் பின்னர் வந்த கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனேவும், கபுகதேராவும் இந்தியப் பந்து வீச்சை பதம் பார்த்து அணியை வெற்றி இலக்குக்கு இட்டுச் சென்றனர்.
இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்கவே இல்லை. ஜெயவர்த்தனே 61 ரன்களும், கபுகதேரா 45 ரன்களும் எடுத்தனர்.
இந்தியப் பந்து வீச்சு இன்று சுத்தமாக எடுபடவில்லை. முனாப் படேல் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களையும் வீழ்த்தினார். இந்தியத் தரப்பில் இன்று 7 பேர் பந்து வீசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் விருது அஜந்தா மெண்டிஸுக்குக் கிடைத்தது.
இந்த வெற்றியின் மூலம் 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications