
இப்படித்தான் இங்கிலாந்தை நமது சுழற்பந்து வீச்சால் புரட்டிப் போட்டுடலாம், புரோட்டா போட்டுடலாம் என்று கூறிக் கொண்டிருந்தோம். ஆனால் அவர்கள்தான் நம்மைப் பதம் பார்த்து விட்டுப் போனார்கள். இந்த நிலையில்தற்போது வந்துள்ள ஆஸ்திரேலியாவை எப்படி வீழ்த்தலாம் என்பது குறித்து ஸ்ரீகாந்த் சில யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் கூறுகையில்,இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியமானது. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற இரு அணிகளும் ரன் குவிக்க ஆர்வமுடன் இருக்கும்.
சமீபத்தில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. அதற்கு பிராயசித்தமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணியில் மைக் ஹஸ்சி, ரிக்கி பாண்டிங் ஓய்வு பெற்று உள்ளனர். அவர்கள் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். அந்த அணியில் பேட்டிங் சிறிது தடுமாற்றத்துடன் உள்ளது. ஷான் வாட்சன், வார்னர், மைக்கேல் கிளார்க் ஆகியோரை விரைவில் ஆட்டமிழக்க செய்துவிட்டால் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்.
இந்திய அணி 4 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுடன் களம் இறங்க வேண்டும். இதனால் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். மேலும் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார்கள் என்றார் அவர்.