கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. இதுதான் இலங்கை மண்ணில் இந்தியா வெல்லும் முதல் ஒரு நாள் போட்டித் தொடராகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் நேற்று 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதற்கு முன்பு நடந்த 3 போட்டிகளில் இந்தியா இரண்டில் வெற்றி பெற்றிருந்தது. எனவே நேற்றைய போட்டியில் வென்றால் தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இந்தியா களம் புகுந்தது.
டாஸ் இந்திய அணியின் கேப்டன் தோணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இதையடுத்து விராட் கோலி, கெளதம் கம்பீர் ஆகியோர் களமிறங்கினர்.
விராட் கோலி 54 ரன்களும், கெளதம் கம்பீர் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மூன்றாவதாக களம் கண்ட, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங் வெறும் 'முட்டையுடன்' திரும்பிப் போனார்.
அடுத்து வந்த சுரேஷ் ரெய்னாவும், தோணியும் அதிரடி ஆட்டம் ஆடினர். ரெய்னா 76 ரன்களைக் குவித்தார். தோணி தன் பங்குக்கு 71 ரன்களை விளாசினர்.
இறுதியில், இந்தியா 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 258 ரன்களைக் குவித்தது.
பின்னர் ஆடிய இலங்கை வீரர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 212 ரன்களில் சுருண்டனர். 46.3 ஓவர்களிலேயே இலங்கையின் ஆட்டத்தை இந்தியா முடிவுக்குக் கொண்டு வந்தது.
ஜெயசூர்யா 60 ரன்கள் எடுத்தார். கபுகதேரா 30 ரன்களும், கடைசி வரிசையில் இறங்கிய துஷாரா 40 ரன்களும் குவித்தனர். துஷாரா பந்து வீச்சிலும் நேற்று அசத்தியிருந்தார். 5 விக்கெட்களை அவர் வீழ்த்தியிருந்தார்.
ஆட்ட நாயகன் விருது சுரேஷ் ரெய்னாவுக்குக் கிடைத்தது. இரு அணிகளும் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை கொழும்பில் நடக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றி விட்டது. மேலும், இலங்கை மண்ணில் அந்த நாட்டுக்கு எதிராக ஒரு நாள் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும்.