மொஹாலி: இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் இதுவரை 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் பீட்டர்சன் சதமடித்தார்.
மொஹாலி டெஸ்ட் போட்டியில் முதல் 2 நாட்கள் விளையாடிய இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 453 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இன்று தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது.
ஆரம்பத்திலேயே இங்கிலாந்துக்கு சரிவு காத்திருந்தது. முதல் ஓவரின் 3வது பந்தில் ஸ்டிராஸ் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஜாகிர்கானால் எல்.பி.டபிள்யூ செய்யப்பட்டார்.
இதையடுத்து அடுத்த ஓவரில் 1 ரன் எடுத்திருந்த இயான் பெல் இஷாந்த் சர்மா பந்தில் போல்ட் ஆனார்.
இதனால் இங்கிலாந்து தடுமாறியது. இருப்பினும் குக்கும், கெவின் பீட்டர்சனும் நிதானமாக ஆடி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.
கெவின் பீட்டர்சன் சிறப்பாக ஆடி அபார சதம் போட்டார். பொறுமையாகவும், நிதானமாகவும் ஆடிய பீட்டர்சன் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
குக் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பிளின்டாப்பின் பங்கு 63 ரன்களாகும்.
ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்திருந்தது.