டெல்லி: நடுவர்களின் பாரபட்ச தீர்ப்புகள், ஹர்பஜன் சிங் மீதான 3 டெஸ்ட் தடை ஆகிய அதிர்ச்சிகளுக்கு இடையிலும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட மாட்டாது. இந்தியா தொடர்ந்து அங்கு போட்டிகளில் கலந்து கொள்ளும் என இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் சிங் மீதான தடை குறித்து நேற்று டெல்லியில் கருத்து தெரிவித்த ராஜீவ் சுக்லா, இந்த தடையை எதிர்த்து வாரியம் அப்பீல் செய்கிறது. இன்னும் 24 மணி நேரங்களில் ஹர்பஜன் சிங்கும், வாரியமும் அப்பீல் செய்வார்கள்.
இந்த சம்பவத்தால் ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. போட்டிகள் தொடரும், இந்திய அணி தனது பயணத்தை திட்டமிட்டபடி முடித்து விட்டே நாடு திரும்பும் என்றார் சுக்லா.
நடுவர்களை மாற்ற இந்தியா கோரிக்கை:
இதற்கிடையே, சர்ச்சைக்குரிய நடுவர்கள் ஸ்டீவ் பக்னர் மற்றும் மார்க் பென்சன் ஆகிய இருவரும் மீதமுள்ள போட்டிகளுக்கு நியமிக்கப்படக் கூடாது. அவர்களை இந்தியா விரும்பவில்லை என்று இந்தியா கூறியுள்ளது.
2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைய முக்கிய காரணே இந்த இரு அம்பயர்களும்தான். இவர்கள் இருவரும் சேர்ந்து செய்த 8 தவறுகள்தான் இந்தியாவை தோல்வியில் தள்ளி விட்டது.
இந்த நிலையில் பெர்த் டெஸ்ட் போட்டியிலும் பக்னரே நடுவராக பங்கேற்கவுள்ளார்.
இந்த நிலையில் இரு நடுவர்களையும் மாற்ற வேண்டும், அவர்கள் வேண்டாம் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இந்திய அணி மேனேஜர் சேத்தன் செளகான் கூறுகையில், இவர்களை இந்திய அணி விரும்பவில்லை. அடுத்து வரும் போட்டிகளில் இவர்கள் இடம் பெறக் கூடாது. இதுதொடர்பாக முறைப்படி புகார் பதிவு செய்யவுள்ளோம்.
நடுவர்களின் தவறான தீர்ப்புகளால்தான் சிட்னி டெஸ்டில் இந்தியா தோல்வி அடைய நேரிட்டது.
இதுகுறித்து வாரியத்துடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். அவர்களும், நடுவர்கள் குறித்து தீவிரமாக புகார் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனவே இந்த நடுவர்கள் மீதமுள்ள போட்டிகளில் இடம் பெறக் கூடாது என்று இந்தியா உறுதியாக கோருகிறது.
மிக மிக தவறான தீர்ப்புகளை இவர்கள் இருவரும் கொடுத்துள்ளனர். இந்த தீர்ப்புகளால் வீரர்கள் கடும் அப்செட் ஆகியுள்ளனர். நடுவர்களின் பெரும்பாலான தீர்ப்புகள் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டு விட்டது.
நடுவர்கள் சரியான தீர்ப்புகளை தெரிவித்திருந்தால் நிச்சயம் இந்தியா இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் என்றார் செளகான்.