சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் இன்று சிட்னியில் நடந்த முதலாவது இறுதிப் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரின் சுற்றுப் போட்டிகள் முடிந்து இன்று இறுதிப் போட்டி தொடங்கியது.
மொத்தம் 3 இறுதிப் போட்டிகளைக் கொண்ட இப்போட்டியில், முதல் போட்டி இன்று சிட்னியில் நடந்தது. இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடியைத் தரும் என்று முன்பே இந்திய வீரர்கள் நம்பிக்கையுடன் கூறியிருந்தனர்.
அதற்கேற்ப இன்று பவுலிங், பேட்டிங் ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி வெற்றியையும் தட்டிச் சென்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். கில்கிறைஸ்ட் 7 ரன்களில் பெவிலியன் திரும்பிய விட ஹெய்டன் அடித்து நொறுக்கினார். 88 பந்துகளில் 82 ரன்களைக் குவித்தார் அவர்.
வழக்கம் போல இந்தப் போட்டியிலும் பான்டிங் சொதப்பினார். ஒரு ரன்னில் அவரை பிரவீன் குமார் ஆட்டமிழக்க வைத்தார். மைக்கேல் கிளார்க் 4 ரன்கள் எடுத்தார்.
சைமண்ட்ஸ் 31 ரன்கள் சேர்த்தார். மைக்கேல் ஹூஸே 45 ரன்கள் குவித்தார். ஹோப்ஸ் 15 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த ஆஸ்திரேலியா 239 ரன்கள் எடுத்தது.
இந்தியத் தரப்பில் பிரவீன் குமார் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுக்களை வீழத்தினார். ஹர்பஜன் சிங் தனது பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இஷாந்த்சர்மா, இர்பான் பதான், யுவராஜ் சிங் ஆகியோருக்கு தலா ஒரு விக்கெட் கிடைத்தது.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா தனது ஆட்டத்தைத் தொடங்கியது.
ராபின் உத்தப்பாவும், சச்சின் டெண்டுல்கரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். ராபின் உத்தப்பா வேகமாக அடித்து ஆட முயன்று 17 ரன்களில் வீழ்ந்தார். ஆனால் சச்சின் படு நிதானமாக ஆட்டத்தை காட்ட ஆரம்பித்தார்.
கெளதம் கம்பீர் வெறும் 3 ரன்களில் வீழ்ந்தார். ஆனால் சச்சின் தொடர்ந்து ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார்.அவரும் ரோஹித் சர்மாவும் சேர்ந்தபோது அணியின் ஸ்கோர் படு வேகமாக உயர ஆரம்பித்தது.
வேகமாக விளையாடிய ரோஹித் சர்மாக சிறப்பாக ஆடி 66 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் சச்சின் சிறப்பாக ஆடி 120 பந்துகளில் 117 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் கலக்கினார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டிகளில் இதுவரை சச்சின் செஞ்சுரி அடித்ததில்லை. அந்தக் குறையை இன்று தீர்த்து வைத்து விட்டார்.
இறுதியில், 45.5 ஓவர்களிலேயே இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 242 ரன்களை எடுத்து முதல் இறுதிப் போட்டியில் அபாரமாக வென்றது.
ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.