கோலாலம்பூர்: கோலாலம்பூரில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை பெற்று சாதனை படைத்தது. இந்திய அணி சாம்பியன் ஆவது இது 2வது முறையாகும்.
கோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாட்டு அணிகள் கலந்து கொண்டன.
இந்திய இளைஞர் அணி ஆரம்பத்திலிருந்தே ஒரு போட்டியிலும் தோற்காமல் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்த நிலையில் நேற்று இறுதிப் போட்டி நடந்தது.
இதில், இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் சந்தித்தன. வலுவான இந்திய அணியை சமாளிக்க முடியாமல் தென் ஆப்பிரிக்கா திணறியது.
முதலில் இந்தியா பேட் செய்தது. மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே தடுமாறி விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஸ்ரீவத்சவா 46 ரன்கள் எடுத்தார். பாண்டே 20 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. இந்திய பேட்ஸ்மென்கள் சொதப்பினாலும் கூட பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், 9வது ஓவரின்போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து 25 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் இந்த ரன்களை எட்ட முடியாமல் தென் ஆப்பிரிக்கா தடுமாறியது. இறுதியில், 25 ஓவர்கள் இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
இதன் மூலம் இந்திய் அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல், இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு இது 2வது உலகக் கோப்பையாகும். இதற்கு முன்பு, 2000மாவது ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றிருந்தது.
இந்திய இளைஞர் அணிக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்திய இளைஞர் அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் போனஸ் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பயிற்சியாளர் டேவ் வாட்மோர், அணி உதவியாளர்களுக்கு தலா ரூ. 10 லட்சம் பரிசளிக்கப்படவுள்ளது.
இந்திய இளைஞர் அணி இன்று பெங்களூர் திரும்புகிறது. அப்போது அணிக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.