கான்பூர்: 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது.
கான்பூரில் இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இன்று 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் வென்றால்தான் தொடரை டிரா செய்ய முடியும் என்பதால் இந்தியா வெற்றியை மனதில் கொண்டு களம் இறங்கியுள்ளது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இன்றைய ஆட்டத்தில் கேப்டன் கும்ப்ளே இடம் பெறவில்லை அவருக்குப் பதில் பியூஷ் சாவ்லா அணியில் இடம் பெற்றார். கேப்டன் பொறுப்பபை டோணி ஏற்றுள்ளார்.
பேட்டிங்கைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்கள் எடுத்த எடுப்பிலேயே அடித்து ஆடத் தொடங்கினர். குறிப்பாக கேப்டன் ஸ்மித் சிறப்பாக ஆடி 69 ரன்களைக் குவித்து யுவராஜ் சிங் பந்தில் ஜாபரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.
மெக்கன்சி 36 ரன்கள் எடுத்தார். 2வது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த ஹஷிம் அம்லாவும் தமது பங்குக்கு சிறப்பாக ஆடி 51 ரன்களை எடுத்தார். கடந்த முறை சதம் அடித்து பயமுறுத்திய கல்லீஸ் இம்முறை ஒரு ரன்னில் வீழ்ந்தார். பிரின்ஸ் 16 ரன்களுக்கு சேவாக் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியினர் வேகமாக ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தனர் இதனால் இந்தியாவின் நிலை பரிதாபநிலைக்கு மாறிக் கொண்டிருந்தது. ஆனால் சுதாரித்துக் கொண்ட இந்தியப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி தென் ஆப்பிரிக்க வீரர்களின் விக்கெட்டுகள் பறித்தனர். பௌச்சர் 29 ரன்களில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
இதனால் தென் ஆப்பிரிக்காவின் ரன் வேகமும் மட்டுப்பட்டது.
கடைசி 5 விக்கெட்டுகள் 50 ரன்களுக்குள் விழுந்தன. ஆட்டநேரம் முடியும் தருவாயில் 87.3 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 265 ரன்களை குவித்தது.
இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா, ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்டுகளை பறித்தனர். பியூஷ் சாவ்லா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். யுவராஜ், சேவாக் ஆளுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.