சென்னை: தென்னாப்பிரிக்காவுடனான முதல் டெஸ்ட் போட்டிக்குத் தயாராகுவதற்காக இந்திய வீரர்கள் சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய- தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடக்கவுள்ள மூன்று டெஸ்ட் போட்டி தொடரின் முதல் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது.
இதற்கான ஆயத்தப் பயிற்சியில் டெஸ்ட் அணி கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். காலையில் மழை வெறித்த நிலையில் ஸ்டேடியத்தில் நல்ல வெயில் அடித்தது. அங்கு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பேட்டிங், பீல்டிங் மற்றும் பௌலிங் பயிற்சிகளை இந்திய வீரர்கள் தீவிரமாக மேற்கொண்டனர்.
அப்போது வீரர்களுக்கு தனித்தனியாக மனநல பயிற்சியை பயிற்சியாளர் பாடி அப்டன் வழங்கினார்.
வீரேந்தர் சேவாக், யுவராஜ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஆகியோரது பயிற்சி ஆட்டங்களை ஸ்லோமோஷனில் வீடியோவில் போட்டு அவர்களுக்கு ஆட்ட நுணுக்கங்களை விளக்கினார் வீடியோ ஆலோசகர் ராமகிருஷ்ணன். அதை வீரர்கள் ஆர்வமாகக் கேட்டறிந்தனர். சென்னை டெஸ்ட் அணியில் இஷாந்த் ஷர்மா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் தகுதியை நிரூபித்து அணியில் இடம்பெற்ற விக்கெட் கீப்பர் மகேந்திர டோணி, சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோரும் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
காயம் காரணமாக அணியில் இடம் பெறாத இடதுகை சுழல் பந்து வீச்சாளர் முரளி கார்த்திக், இடது காலில் கட்டு போடப்பட்ட நிலையில் பயிற்சி மைதானத்தில் உலவிக்கொண்டிருந்தார்.
பரபரப்பான இந்த சூழ்நிலையில் சென்னையில் கடந்த 2 நாள்களாக பெய்த மழை நின்றுவிட்டது. ஸ்டேடியத்தில் உள்ள புல்வெளி ஈரம் காய்ந்துவிட்டது. விளையாட்டு பிட்ச்சில் மார்க்கர்கள் தண்ணீர் ஊற்றி இரும்பு ரோலர்களை வைத்து சமன்படுத்தினர்.
புயல் சின்னங்கள் பொழிந்த மழையால் நனைந்த சென்னை மக்களை ரன் மழையால் நனைக்க தயாராகிவிட்டனர் இந்திய- தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள்.