டாக்கா: வங்கதேச முத்தரப்புத் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
வங்ககதேசத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேச அணிகளுக்கு இடையிலான முத்தரப்புத் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இது பகலிரவுப் போட்டியாகும்.
ஏற்கனவே நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தானை 140 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வி அடையச் செய்தது இந்தியா. இதனால் பழிவாங்கும் ஆக்ரோஷத்துடன் இன்றைய போட்டியை சந்திக்கிறது பாகிஸ்தான்.
அதேசமயம், இந்திய அணி சுற்றுப் போட்டிகளில் வலுவாக வென்ற தெம்புடனும், நல்ல பார்மில் உள்ள வீரர்களுடனும் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வெல்ல தயாராக உள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கவுதம் கம்பீரும், வீரேந்திர ஷேவாக்கம் சிறந்த நிலையில் உள்ளனர். மேலும், யுவராஜ் சிங், டோணி உள்ளிட்டோரும் சிறப்பான பார்மில் உள்ளனர்.
அதேபோல பியூஷ் சாவ்லா, பிரவீன் குமார், இஷாந்த்சர்மா ஆகியோரும் பந்து வீச்சில் வலுவாக உள்ளனர்.
பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் சொயீப் மாலிக், மிஸ்பா உல் ஹக், கம்ரன் அக்மல், யூசுப், சல்மான் பட், அப்ரிதி, யூனிஸ்கான் என வலுவான வீரர் பட்டாளம் உள்ளது.
லீக் ஆட்டத்தில் தோற்கடித்த இந்தியாவுக்கு பதிலடிகொடுக்க இன்று பாகிஸ்தான் முயலும். அதேசமயம், கோப்பையை வெல்ல இந்தியா வேகமாக உள்ளது. எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.