டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் தவிர வேறு ஒரு அணியும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது என்று டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா மற்றும் 25 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இது குறித்து டெல்லி போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் கூறுகையில்,
ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவிர வேறு ஒரு அணியும் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. அது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஆனால் இது வரை எதுவும் புலப்படவில்லை. போதிய ஆதாரம் கிடைக்கும் வரை சூதாட்டத்தில் ஈடுபட்ட அணி மற்றும் வீரர்களின் பெயர்களை நாங்கள் தெரிவிக்க மாட்டோம். ஸ்ரீசாந்த் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுவிட்டார். ஆனால் அவர் எங்களிடம் குற்றத்தை ஒப்புக் கொண்டது பெரிதில்லை, நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்கள் தான் தேவை என்றார்.
ஸ்ரீசாந்தின் லேப்டாப், தரகர்கள் கொடுத்த பணத்தில் வாங்கிய விலை உயர்ந்த ஆடைகள் ஆகியவை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு குமார் கூறுகையில், அதையெல்லாம் உங்களிடம் கொடுக்க முடியாது நீதிமன்றத்தில் சமர்பிப்பபோம் என்றார்.