கொல்கத்தா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்கேப்டன் டோணி, கடந்த 2 நாட்களாக மீடியாவை தவிர்த்து வருகிறார். ஸ்பாட் பிக்ஸிங் குறித்தே பத்திரிக்கையாளர்கள் அதிகம் கேட்கிறார்கள் என்பதால் அவர் தவிர்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த 3 பேரை விண்டு சிங் போட்டுக் கொடுத்து விட்டார் என்று செய்திகள் அடிபடுவதாலும் மீடியாவை டோணி தவிர்க்க முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் வேண்டும்என்றே மீடியாவை டோணி தவிர்க்கவில்லை என்று அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பிளமிங் கூறுகையில், டோணியின் ஸ்டைலே அதுதான். அவர் மீடியாவிடமிருந்து எப்போதும் ஒதுங்கியே இருப்பார். அவருக்குப் பதில்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேனே. எனவே டோணி பேசாதது குறித்து பெரிதாக விவாதிக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன்என்று கூறியுள்ளார் பிளமிங்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்திக்க டோணி வரவில்லை. அதன் பிறகும் கூட அவர் செய்தியாளர்களை சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார்.

மேலும் போட்டிக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மாவும், டோணியும் இணைந்து பேட்டி அளிப்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. பதிலாக இரு அணிகளின் பயிற்சியாளர்கள்தான் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
சென்னை சூப்ப்ர் கிங்ஸ் அணியின் 'பிரின்சிபல்' குருநாத் மெய்யப்பன் கைது, மனைவி சாக்ஷியுடன் விண்டு சிங் கேலரிகளில் சேர்ந்து அமர்ந்திருந்தது தொடர்பான சர்ச்சை உள்ளிட்டவற்றால் டோணி அப்செட்டாகியுள்ளார் என்றும் இதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்பதைத் தவிர்க்கும் வகையிலேயே அவர் செய்தியாளர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
நாங்க உங்களை நம்புகிறோம் டோணி... கூலா இருங்க!