டெல்லி: லாகூர் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, லோக்சபா தேர்தலுடன் குறுக்கிடும் போட்டிகளின் தேதிகளை இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பு மாற்றி அமைத்து அவற்றை உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது.லாகூரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் லோக்சபா தேர்தல் போன்ற மிகப் பெரிய நிகழ்வின்போது ஐபிஎல் போட்டிகளை அனுமதிக்க முடியாது என நேற்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருந்தார்.இதையடுத்து நேற்று ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் கூடி விவாதித்தது. தேர்தலுடன் குறுக்கிடும் போட்டிகளின் தேதிகளை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி தேதிகளை மாற்றியமைத்து உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. உள்துறை அமைச்சகம் தனது முடிவை நாளைக்குள் அறிவிக்கும் எனத் தெரிகிறது.தற்போதைய அட்டவணைப்படி, தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் 24 ஐபிஎல் டுவென்டி 20 போட்டிகள் குறுக்கிடுகின்றன. உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் ஐபிஎல் போட்டிகளை இந்த ஆண்டு நடத்த முடியாத நிலை ஏற்படும் என்பதால் தேதிகளை மாற்றியமைக்க அவசரம் அவசரமாக ஐபிஎல் தீர்மானித்தது என்பது குறிப்பிடத்தக்கது.