டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கிய வின்து தாரா சிங் அருகில் சென்னை அணியின் கேப்டன் டோணியின் மனைவி இருக்கும் புகைப்படங்களை மீடியாக்கள் காண்பித்து வருகின்றன. இது குறித்து சாக்ஷி ட்விட்டரில் பாட்டு மூலம் பதில் அளித்துள்ளார்.
ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக மறைந்த பாலிவுட் நடிகர் தாரா சிங்கின் மகன் வின்து தாரா சிங் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையில் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில் அவருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ குருநாத் மெய்யப்பனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் வின்து கைதான செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அவர் சென்னை அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷியுடன் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த புகைப்படங்களை வெளியிட்டன. வின்து சாக்ஷியிடம் சிரித்து பேசுவது, தனது கையை மடக்கி பலத்தை காண்பிப்பது போன்ற புகைப்படங்கள் வெளி வந்தன.
இது குறித்து சாக்ஷி தற்போது ட்விட்டரில் இந்தி பாட்டு மூலம் பதில் தெரிவித்துள்ளார்.
அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உலகத்தில் உள்ளவர்கள் எதையாவது சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். அது தான் அவர்கள் வேலை என்ற பொருள் கொண்ட இந்தி பாடல் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார்.