ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங்கில் சிக்கிய பாலிவுட் நடிகர் வின்து தாரா சிங் அருகில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷிக்கு தவறான விளம்பரம் கிடைத்துள்ளது. இந்நிலையில் அவரின் தோழி சாக்ஷி ஜலா ஸ்ரீசாந்துடன் நட்பாக இருந்ததால் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
ஸ்பாட் பிக்ஸிங் செய்ததற்காக கைது செய்யப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் தனது தோழியான சாக்ஷி ஜலாவுக்கு பிளாக்பெர்ரி போனை பரிசளித்துள்ளார். அந்த போன் சூதாட்ட பணத்தில் வாங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் அதை பறிமுதல் செய்துள்ளனர்.
சாக்ஷி ஜலா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணியின் மனைவி சாக்ஷியின் தோழி. இருவரும் சேர்ந்து ஔரங்காபாத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் ஹோட்டல் நிர்வாக படிப்பு படித்துள்ளனர். அதன் பிறகு சாக்ஷி டோணியை மணந்து கொண்டார். சாக்ஷி ஜலா ஜெய்பூரில் உள்ள ராம்பாக் ஹோட்டலில் பயிற்சி பெற்றார். பின்னர் கிங்ஃபிஷர் ஏல்லைன்ஸை மூடும் வரை அதில் ஏர்ஹோஸ்டஸாக பணியாற்றினார்.
சாக்ஷி டோணி தனது தோழியை ஐபிஎல் 2வது சீசனின்போது ஸ்ரீசாந்துக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மேலும் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் அவரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அதில் இருந்து சாக்ஷி ஜலாவும், ஸ்ரீசாந்தும் நண்பர்களாக உள்ளனர்.
ஐபிஎல் போட்டிகள் முடந்த பிறகு நடக்கும் பார்ட்டிகளில் சாக்ஷி ஜலா ஸ்ரீசாந்துடன் இருந்துள்ளார். மேலும் டோணியின் மனைவியுடன் சேர்ந்து ஜலா பல்வேறு கிரிக்கெட் போட்டிகளை பார்த்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் அரங்கில் இந்த மாத துவக்கத்தில் நடந்த போட்டிக்கு பிறகு டோணியின் மனைவிக்கு அருகில் இருந்த பெண்ணுடன் ஸ்ரீசாந்த் மாயமானார். அந்த பெண் ஜலாவாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஜலாவின் வீட்டில் கடந்த 6ம் தேதி இரவு ஸ்ரீசாந்துக்கு விருந்து கொடுத்துள்ளனர். அப்போது தான் அவர் பிளாக்பெர்ரி போனை பரிசளித்துள்ளார். ஜலாவின் குடும்பத்திற்கும் ஸ்பாட் பிக்ஸிங்கிற்கும் தொடர்பில்லை என்பது டெல்லி போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.