
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்தான் நசீர் ஜாம்ஷெட். சிறப்பாக ஆடி வரும் அவரால்தான் முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை தோற்கடித்தது. இந்த நிலையில் ஜாம்ஷெட், ஷேவாக்கை விட அபாயகரமான பேட்ஸ்மேன் என்று வர்ணித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரரான சாதிக் முகம்மது.
மேலும் ஷேவாக் அதிரடியாக ஆட ஆரம்பித்து விட்டால் ஒரு தீவிரவாதி போல மாறி விடுகிறார் என்றும், அவரை நிறுத்துவது என்பது மிகவும் கஷ்டமான காரியம் என்றும் கூறியுள்ளார் முகம்மது
இதுகுறித்து அவர் கூறுகையில், ஷேவாக் அடித்து ஆட ஆரம்பித்து விட்டால் ஒரு தீவிரவாதியாக மாறி விடுகிறார்.அவரை தடுத்து நிறுத்துவது என்பது இயலாத காரியமாகி விடும். அப்படி ஒரு ஆட்டம் ஆடுவார்.
அதேசமயம், பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் ஜாம்ஷெட், ஷேவாக்கை விட அபாயகரமானவராக தற்போது தலையெடுக்க ஆரம்பித்துள்ளார் என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும். டெக்னிக்கலாக அவர் மிகச் சரியாக ஆடுகிறார். நீண்ட நேரம் நின்று ஆடக் கூடிய வலிமையும், திறமையும் அவரிடம் உள்ளது. அவர் செட்டிலாகி விட்டால், அவரை அவுட் செய்வது மிகக் கடினமாக இருக்கிறது.
ஷேவாக்கிடமாவது, அவர் பேட்டிங்கில் செட்டிலாகும் வரை சற்று தொய்வு காணப்படும். ஆனால் ஜாம்ஷெட்டிடம் அப்படி எந்த இடைவெளியும் கிடைப்பதில்லை என்பதால் ஷேவாக்கை விட அபாயகரமானவர் இவர் என்பதில் சந்தேகமில்லை என்றார் முகம்மது.