டெல்லி: இந்திய பேட்மிண்டன் லீக் போட்டியில் குறைந்த விலைக்கு ஏலம் போயுள்ள வீராங்கனைகளான ஜூவாலாவும், அஸ்வினியும் ஏலம் குறித்து தங்களது மனக்குமுறல்களை வெளியிட்டுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 14 முதல் 31 வரை, இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ள இந்திய பேட்மிண்டன் போட்டி நடக்க உள்ளது. இதன் பரிசுத் தொகை ரூ 6 கோடி ஆகும். இப்போட்டிகளில் பங்கேற்க இருக்கும் வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுப்பதைப் போன்றே ஏல முறையில் சில தினங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுத்தனர்.

சாய்னா நேவால், ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா, பி.வி.சிந்து ஆகிய இந்திய நட்சத்திர வீராங்கனைகள் இந்த ஏலத்தில் அதிகபட்சமாக முத்திரை அந்தஸ்து வழங்கப்பட்டு ரூ 29.5 லட்சத்திற்கு விலை நிர்ணயிக்கப்பட்டனர்
அதிகபட்ச ஏலத்தொகையாக, சாய்னா ரூ.72 லட்சத்துக்கும், சிந்து ரூ.48 லட்சத்துக்கும் ஏலம் போனார்கள். ஆனால், ஜூவாலா, சிந்து ஆகியோரின் தொடக்க விலை கடைசி நேரத்தில் அதிரடியாகக் குறைக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜூவாலாவை ரூ.19 லட்சத்திற்கு டெல்லி ஸ்மாஷர்ஸ் அணியும், அஸ்வினியை ரூ.15 லட்சத்திற்கு புனே பிஸ்டன்ஸ் அணியும் வாங்கின.
இவ்வாறு தங்களை குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதால், மிகுந்த அதிருப்தியில் உள்ளனர் ஜூவாலாவும், அஸ்வினியும்.
ஜூவாலா கட்டா தனது ஏலவிலை குறித்து வெளியிட்டுள்ள கருத்தாவது, 'நானும், அஸ்வினும், முத்திரை அந்தஸ்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தோம். எங்களை இதை விட அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்திருக்க வேண்டும். அடிப்படை விலை குறைக்கப்பட்டது குறித்து எங்களுக்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை. இந்த போட்டியில் பெண்கள் இரட்டையருக்கு பதிலாக இன்னொரு ஒற்றையர் பிரிவு சேர்க்கப்பட்டிருப்பதாக கடைசி நேரத்தில் அறிந்தேன். மொத்தத்தில் எங்களை நடத்திய விதம் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அஸ்வினி தெரிவித்ததாவது, 'இந்த விஷயம் குறித்து எனக்கு யாரும் தெரிவிக்கவில்லை. அது பற்றி விளக்கவும் இல்லை. இதனால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளேன். ஏலம் முடியும் வரை விலை குறைப்பு குறித்தும் எதுவும் எனக்கு தெரியாது. பெண்கள் இரட்டையர் பிரிவு நீக்கப்பட்டதால், எங்களது விலை குறைக்கப்பட்டதாக பிறகு தெரியவந்தது. ஆனால் மற்ற பெண்கள் இரட்டையர் பிரிவு வீராங்கனைகள் எங்களை விட நிறைய தொகைக்கு விற்கப்பட்டுள்ளனர். இது மேலும் எங்களை இழிவுப்படுத்துவது போன்று உள்ளது. முத்திரை வீரர், வீராங்கனை அந்தஸ்து பெற்ற எங்களை அதற்குரிய மதிப்புடன் நடத்தவில்லை" எனக் கூறியுள்ளார்.
வீராங்கனைகளின் இந்த மன வருத்தத்தை கேள்விப்பட்ட இந்திய பேட்மிண்டன் லீக் அதிகாரிகளில் ஒருவரான ஆஷிஷ் சதா, ஏல விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், "ஜூவாலா கட்டாவும், அஸ்வினியும் முதலில் ஏலம் போகவில்லை. இதையடுத்து அவர்களது அடிப்படை விலையை ரூ.15 லட்சமாக குறைப்பது என்று முடிவு செய்தோம். ஜூவாலா, அஸ்வினி இருவருக்கும் பெண்கள் இரட்டையர் பிரிவை மனதில் வைத்தே முத்திரை வீரர் அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால் அணி உரிமையாளர்களுடன் ஆலோசனை முடிவில் பெண்கள் இரட்டையருக்கு பதிலாக இன்னொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தை இடம் பெற வைப்பது என்று முடிவு செய்யப்பட்டு விட்டது" என தெரிவித்துள்ளார்.