மும்பை: தன்னை மீண்டும் விளையாட அழைப்பார்கள் என்று பொறுத்துப் பொறுத்துப் பார்த்து நொந்து போன வினோத் காம்ப்ளி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் கேல் பாரதி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றையும் துவக்கியுள்ளார்.மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் நெருங்கிய நண்பர் வினோத் காம்ப்ளி. இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தின் போது இணைந்து 664 ரன்கள் எடுத்து சாதனை படைத்தனர்.இதையடுத்து கடந்த 1991ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காம்ப்ளி அறிமுகமானார். கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய சில மாதங்களிலே டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து திடீர் புகழ் பெற்றார். ஆனால், அது நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அணியில் இடத்தை இழந்தார். அவர் கடைசியாக 2000ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக இந்திய அணியில் விளையாடினார். அதன் பின்னர் கடந்த 9 ஆண்டுகளாக அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர் நேற்று சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.அவர் இதுவரை 17 டெஸ்டில் பங்கேற்று 4 சதம் உட்பட 1087 ரன்களும், 104 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2 சதம் உட்பட 2477 ரன்களும் எடுத்துள்ளார்.ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட கையோடு அவர் கேல் பாரதி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றையும் துவக்கியுள்ளார். இந்த விழாவில் அதிரடி துவக்க வீரர் ஷேவாக் பங்கேற்று அகாடமியை துவக்கி வைத்தார். அப்போது ஷேவாக் கூறுகையில்,காம்ப்ளி மிகச்சிறந்த வீரர். அவரை போன்றவர்களின் ஆட்டத்தை பார்த்து தான் கிரிக்கெட் கற்று கொண்டேன். துரதிருஷ்டவசமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிந்துவிட்டது. ஆனால், அவரது அகாடமி பல பெரிய வீரர்களை உருவாக்கும் என நம்புகிறேன் என்றார்.