ஜோகன்னஸ்பர்க்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் கேரி கிர்ஸ்டன் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அவரது சம்மதத்தை நேற்றைக்குள் தெரிவிக்குமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டிருந்தது. ஆனால் மூத்த வீரர்கள் கிர்ஸ்டன் தேர்வு குறித்து அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனால் தனது முடிவை அறிவிப்பதில் தாமதம் செய்தார் கிர்ஸ்டன். ஆனால் மூத்த வீரர்கள் யாரும் அதிருப்தியுடன் இல்லை. அந்தத் தகவல் தவறானது, அனைவரும் கிர்ஸ்டன் பயிற்சியாளராக வருவதை விரும்புகின்றனர் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியது. இதையடுத்து பயிற்சியாளர் பதவியை ஏற்க கிர்ஸ்டன் முடிவு செய்துள்ளார். இதுகுறித்து ஜோகன்னஸ்பர்க்கில் அவர் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடிவு செய்துள்ளேன். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பயிற்சியாளராக செயல்படுவேன். இருப்பினும் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில், ஆலோசகராக இடம் பெற்று நானும் ஆஸ்திரேலியா செல்கிறேன் என்றார் கிர்ஸ்டன்.