பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நேற்று நடந்த போட்டியின்போது திடீரென இரு அணிகளின் கேப்டன்களுக்கும் இடையே கடும் வாய்ச்சண்டை மூண்டது. இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இரு கேப்டன்களையும் நடுவர்கள் கடுமையாக எச்சரித்தனர். போட்டி முடிந்ததும் இருவரையும் போட்டி நடுவர் நேரில் அழைத்து கண்டித்தார்.

பெங்களூர் அணி பேட் செய்து கொண்டிருந்தபோது விராத் கோஹ்லி, 10வது ஓவரின்போது ஆட்டமிழந்தார். பாலாஜி பந்தை அடித்தபோது அது கேட்ச் ஆனது. கோஹ்லி ஆட்டமிழந்ததும் அதைக் கொண்டாடும் வகையில் கம்பீர் தனது சக வீரர்களிடம் ஓடினார். அனைவரும் கைகளை தட்டியபடியும், குலுக்கியபடியும் கோஹ்லியின் விக்கெட் வீழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். அப்போது பெவிலியனுக்குச் செல்வதற்காக கிளம்பிய கோஹ்லி, அப்படியே கம்பீர் பக்கம் சென்று அவரிடம் போய் பேசியதால்தான் பிரச்சினை ஏ ற்பட்டது.
கோஹ்லியின் பேச்சால் கடும் கோபமடைந்த கம்பீர், பதிலுக்கு கோஹ்லியை நெருகிப் பேச இருவரும் வாய்ச் சண்டையில் குதித்தனர். இதையடுத்து டெல்லியைச் சேர்ந்த இன்னொரு வீரரான ரஜத் பாட்டியா இடையில் புகுந்து இருவரையும் அமைதிப்படுத்த முயன்றார்.
நடுவர்களும் இரு கேப்டன்களையும் எச்சரித்தனர். பின்னர் இருவர் மீதும் லெவல் ஒன் குற்றச்சாட்டு பதிவானது. போட்டியின்நடுவே ஆபாசமாக பேசுவது, அவமானப்படுத்தும் வகையில் பேசுவது ஆகிய குற்றச்சாட்டாகும் இது.
இருவருமே டெல்லிதான்
கோஹ்லியும் சரி, கம்பீரும் சரி இருவருமே டெல்லியைச் சேர்ந்தவர்கள்தான். டெல்லி ரஞ்சி அணியில் ஆடியவர்கள். இந்திய அணியில் இணைந்து ஆடியவர்கள்.இவர்களுக்குள் ஏன் நேற்று முட்டிக் கொண்டது ஏன் என்பதுதான் தெரியவில்லை.
''வருங்கால அமெரிக்க ஜனாதிபதி''
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி ரேஞ்சுக்கு, இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று இப்போதே தட்டிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருபவர் விராத் கோஹ்லி.
அதேசமயம், பார்மில் இல்லாத காரணத்தால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு தவித்துக் கொண்டிருப்பவர் கம்பீர். கூடவே வீரேந்திர ஷேவாக்கும் அணியில்இடம் கிடைக்காமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்திய அணியில் ஷேவாக், கம்பீர், டோணிக்கு இடையே ஆகாது. இந்த நிலையில் கம்பீருடன் கோஹ்லி மோதியிருப்பதால் ஏதேனும் உள் குத்து, வெளிக்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.