
ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 சமநிலையில் உள்ளன.
சுருண்ட ஆஸ்திரேலியா
இந்நிலையில் 3-வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கையின் பந்து வீச்சை ஆஸ்திரேலியாவால் எதிர்கொள்ள முடியவில்லை. 74 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்து ஆஸ்திரேலியா. இலங்கைக்கு எதிரான போட்டிகளில் ஆஸ்திரேலியா எடுக்கும் 3-வது மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இது. அந்த அணியில் ஸ்டார்க் 22 ரன்னும், டொஹெர்டி 15 ரன்னும் எடுத்ததுதான் மிக அதிகபட்ச ரன்கள். இலங்கையின் குலசேகர, 5 விக்கெட்டுகளையும் மலிங்கா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தடுமாறி வென்ற இலங்கை
பின்னர் ஆடிய இலங்கைக்கும் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. இலங்கை கேப்டன் மஹேல ஜெயவர்த்தன ஒரு ரன்னோடு அவுட் ஆனார். தில்சான் 22 ரன்கள் மட்டும் எடுத்தார். 36 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்தது இலங்கை. பின்னர் ஆடிய தாரங்காவும் குசால் பெரேராவும் சற்று நிதானமாக ஆடினர். ஒருவழியாக 6 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 75 ரன்களை எட்டியது இலங்கை. 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அணி ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக இலங்கையின் குலசேகர தேர்வானார்.