மொஹாலி: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகளிலும் இரு அணிகளும் மோதவுள்ளன.
இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. டோணியையே கேப்டனாக நியமிக்க பல தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தன. காரணம் டோணிக்கு அனுவபம் குறைவாக உள்ளதால், அனுபவசாலி வீரரையே கேப்டனாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து சச்சின் டெண்டுல்கரை கேப்டனாக நியமிக்க தேர்வுக்கு யோசித்தது. ஆனால் தனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என சச்சின் கூறி விட்டார். இதனால் கேப்டன் யார் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. அனேகமாக டோணியே கேப்டனாக்கப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் அனில் கும்ப்ளேவின் பெயர் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்போது அவரே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சண்டிகரில், இந்திய கிரிக்கெட் வாரிய இணைச் செயலாளர் பாண்டோவ் முறைப்படி அறிவித்தார்.
37 வயதாகும் அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாக கூறிய பாண்டோவ், பாகிஸ்தானுடனான அடுத்த 2 ஒரு நாள் போட்டிகளுக்கான அணி குறித்த விவரத்தையும் அறிவித்தார்.
சண்டிகரில் நடந்த போட்டியில் இடம் பெற்ற 15 வீரர்களும் கான்பூர் மற்றும் குவாலியரில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
ஒரு நாள் அணி விவரம்: எம்.எஸ்.டோணி (கேப்டன்), யுவராஜ் சிங், வீரேந்திர ஷேவாக், செளரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், கெளதம் காம்பீர், ராபின் உத்தப்பா, ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், முரளி கார்த்திக், ஜாகிர் கான், ஆர்.பி.சிங், இர்பான் பதான், ஸ்ரீசாந்த், பிரவீண் குமார்.
கும்ப்ளே மகிழ்ச்சி:
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து அனில் கும்ப்ளே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். டெஸ்ட் தொடரை வெல்வதே தனது முதன்மையான குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் கும்ப்ளே பேசுகையில், வெற்றிப் பாதையில் அணியை இட்டுச் செல்வதே எனது பிரதான பணியாக இருக்கும்.
இந்தியாவை வெற்றி பெறச் செய்வது யாருக்குமே சாதாரண விஷயம் கிடையாது. இந்த சவாலை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.
அணியின் ஒட்டுமொத்த வெற்றியும், இலக்குகளும்தான் முக்கியம். தனிப்பட்ட சாதனைக்கு நான் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை வெல்ல அணியினரின் முழு ஒத்துழைப்புடன் பாடுபடுவேன் என்றார் கும்ப்ளே.