கொழும்பு: 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவி விட 2 ரன்கள் கூடுதலாக எடுத்துள்ளது இலங்கை. சங்கக்காரா நிதானமாக ஆடி சதமடித்தார்.
கொழும்பில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தோற்று, காலி டெஸ்ட் போட்டியில் வென்று, 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் சம நிலையில் இந்தியா உள்ளது. இந்த நிலையில் 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பு சரவணமுத்து ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் மிக நிதானமாக ஆடி 249 ரன்களுக்கு ஆட்டமிழந்து விட்டது. கம்பீர் மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரது பங்கு 72 ரன்களாகும்.
ஷேவாக் அதிரடியாக ஆடி 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் வழக்கம் போல சொற்பரன்களில் ஆட்டமிழந்தனர்.
கங்குலி சற்றே நிதானமாக ஆடி 35 ரன்களைச் சேர்த்தார். லட்சுமண் 25, ஜாகிர்கான் 32 ரன்கள் எடுத்தனர்.
இந்தியாவை மீண்டும் மெண்டிஸ் புயல் தாக்கியது. அவர் 5 விக்கெட்டுகளையும், முரளிதரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடத் தொடங்கிய இலங்கை நேற்றைய ஆட்ட நேர இறுதியில்,ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று காலை மீண்டும் இலங்கை தனது ஆட்டத்தைத் தொடர்ந்தது. அப்போது 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வான்டார்ட், ஜாகிர்கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து நைட் வாட்ச்மேன் வாஸும், சங்கக்காராவும் இணைந்து விக்கெட் வீழ்ச்சியை தடுக்கும் வகையில் நிதானமாக ஆடினர். வாஸ் நிதானமாக ஆடி47 ரன்கள் சேர்த்தார். மறு முனையில் மகா நிதானமாக ஆடிய சங்கக்காரா மிகப் பொறுமையாக சதமடித்து இலங்கை அணியின் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினார்.
226 பந்துகளை சந்தித்த அவர் 107 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
கேப்டன் மஹிளா ஜெயவர்த்தனே2 ரன்களில் வீழ்ந்தார். சங்கக்காராவுடன் இணைந்து ஆடிய சமரவீரா 35 ரன்கள் எடுத்தார். தில்ஷானின் பங்கு 23 ரன்களாகும்.
இறுதியில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் வேகமாகவே முடித்துக் கொள்ளப்பட்டது.
ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி இந்தியாவின் ஸ்கோரை விட 2 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது. இலங்கையின் இன்றைய இறுதி ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 251 ஆகும்.
இந்தியத் தரப்பில் ஹர்பஜன் சிங், ஜாகிர்கான் தலா 2 விக்கெட்களையும், கும்ப்ளே, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.