கராச்சி: இலங்கை தொடர் கடும் சவாலானது. டுவென்டி-20 கோப்பை வென்ற சில நாட்களிலே டெஸ்ட் தொடரில் மோதுவதால் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் என அந்நாட்டு ஆல்-ரவுண்டர் அப்ரிதி தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் நடந்த டுவென்டி-20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான், இலங்கையை வீழ்த்தி கோப்பை வென்றது. அரையிறுதி மற்றும் இறுதி போட்டியில் ஆல்-ரவுண்டராக ஜொலித்த அப்ரிதி அந்த இரண்டு போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்தார்.உலக கோப்பை வென்ற கையோடு கேப்டன் யூனிஸ் கான் டுவென்டி-20 தொடரிலிருந்து ஓய்வு பெற்றதை அடுத்து அப்ரிதி தான் அடுத்து டுவென்டி-20 கேப்டன் என பாகிஸ்தான் கிரி்க்கெட் வட்டாரங்கள் அடித்து சொல்கின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 போட்டிகளில் பங்கேற்க இலங்கை சென்றுள்ளது. முதல் டெஸ்ட் வரும் 4ம் தேதி காலேவில் துவங்குகிறது.இந்த டெஸ்ட் தொடரில் அப்ரிதி பங்கேற்கவில்லை. அவர் ஓய்வு எடுத்து கொண்டார். இலங்கையில் நடக்கும் ஒரு நாள் மற்றும் டுவென்டி-20 போட்டியில் மட்டும் அவர் பங்கேற்பார் என கூறப்படுகிறது.இது குறித்து அப்ரிதி கூறுகையில்,இலங்கையில் நடக்கும் தொடர் பாகிஸ்தான் அணிக்கு அவ்வளவு எளிதாக அமைந்துவிடாது. இது பெரிய சவாலான தொடர். டுவென்டி-20 தொடரில் பங்கேற்ற வீரர்கள் உடனடியாக டெஸ்ட் போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்தவது சற்று கடினம் தான். ஆனால், அதில் பாகிஸ்தான் வீரர்கள் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும்.கேப்டன் பதவி...கேப்டன் பதவிக்கு பின்னால் நான் எப்போதும் ஓடியதில்லை. தற்போது அதை பற்றி நினைத்து பார்க்கவும் இல்லை. பாகிஸ்தானுக்காக விளையாடுவதும், பாகிஸ்தான் வெற்றி பெறுவதை பார்த்து மகிழ்வதுமே எனக்கு கிடைத்த போனஸ்.நான் கடந்த ஆண்டு அதிக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. அதனால் தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்காமல் ஓய்வு பெற்று கொண்டேன். ஒரு நாள் தொடருக்காக பயிற்சி செய்து வருகிறேன்.மூன்று நாள் தான் கொண்டாட்டம்...பாகிஸ்தான் அணி கோப்பை வென்ற உற்சாகத்தை சொந்த மண்ணில் ரசிகர்களுடன் மூன்று நாட்கள் தான் கொண்டாட முடிந்தது. அதற்குள் அடுத்த தொடரில் பங்கேற்க இலங்கை சென்றுவிட்டது. அடுத்தடுத்து போட்டிகள் நடப்பது வருத்தத்துக்கு உரியது என்றார் அப்ரிதி.