
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பாகிஸ்தானை சந்தித்த இந்திய அணி ரன் எடுப்பதற்குள் கடுமையாக திணறிப் போய் விட்டது. பாகிஸ்தான் வீரர் ஜூனைத்கானின் அபாரப் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்தியா 50 ரன்களாவது சேர்க்குமா என்ற பெரும் அபாயகரமான நிலையும் ஒரு கட்டத்தில் இருந்தது. அந்த அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. ஆனால் சுரேஷ் ரெய்னா மற்றும் கேப்டன் டோணியின் திறமையான ஆட்டத்தாலும், பொறுப்பான ஆட்டத்தாலும் இந்தியாவின் மானம் கப்பலேறாமல் காபபாற்றப்பட்டுள்ளது. மேலும் குறைந்த ஸ்கோரை எடுக்கும் அபாயத்திலிருந்தும் இந்தியா தப்பியுள்ளது.
இதுவரை இந்தியா எடுத்துள்ள மிகவும் குறைந்த ஸ்கோர் விவரம்
இந்தியா இதுவரை எடுத்ததிலேயே மிகவும் குறைவான ஸ்கோர் 54 ரன்கள்தான். 2000மாவது ஆண்டு ஷார்ஜா போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்த அவமானத்தை இந்தியா சந்தித்தது.
அதேபோல 1981ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 63, 1986ல் இலங்கைக்கு எதிராக 74, 1978ல் பாகிஸ்தானுக்கு எதிராக 79, 2010ல் நியூசிலாந்துக்கு எதிராக 88, 2006ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 91, 2000மாவது ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 100, 1993ல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக 100, 2010ல் இலங்கைக்கு எதிராக 103, அதே இலங்கைக்கு எதிராக 2008ல் மீண்டும் 103 என குறைந்த ஸ்கோர்களை இதற்கு முன்பு எடுத்துள்ளது இந்தியா.
ஆனால் இன்றைய சென்னைப் போட்டியில் அந்த அவல நிலையிலிருந்து அது தப்பி ஓடி விட்டது.