
என்னதான் நடக்கிறது
விராட் கோலி ஒருநாள் அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்த போது பிசிசிஐ அதனை ஏற்காமல் ரோகித்தை நியமித்தது. இதுதான் பிசிசிஐ மீதுள்ள முக்கிய குற்றச்சாட்டு. ஆனால் இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் கங்குலி, டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு தனி தனி கேப்டன்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் மாற்றினோம் எனக்கூறினார்.

கோபத்தை வெளிப்படுத்திய கோலி
எனினும் இந்த விவகாரத்தில் சமாதானம் ஆகாத விராட் கோலி, தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் தனது கோபத்தை காட்டி வருகிறார் என்பது போல தெரிகிறது. இந்திய அணி வரும் டிசம்பர் 16ம் தேதியன்று தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்காக அனைத்து வீரர்களும் பயோ பபுளுக்குள் நுழைந்துவிட்ட போதும், விராட் கோலி வரமுடியாது என்பது போல உள்ளார். மேலும் ஒருநாள் போட்டி தொடரிலும் பங்கேற்க போவதில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிடிவாத முடிவுகள்
அதாவது ரோகித் சர்மா கேப்டனாக செயல்படபோகும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் எனக்கூறப்படுகிறது. இதே போல விராட் கோலி கேப்டனாக செயல்படும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா வெளியேறியுள்ளார். காயத்தை அவர் காரணமாக கூறினாலும், இருவருக்குள் இருக்கும் பிரச்னை வெளிப்படையாக தெரிகிறது.

மத்திய அமைச்சர் தலையீடு
இந்நிலையில் இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், விளையாட்டு தான் அனைவரையும் விட பெரியது. அதனை விட முக்கியமானவர்கள் யாரும் இல்லை. இரு வீரர்களுக்கும் என்ன பிரச்சினை, எதற்காக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து என்னால் எதனையும் கூற முடியாது. சம்பந்தபட்ட அமைப்பு, தான் விளக்கம் அளிக்க வேண்டும். எனவே பிசிசிஐ இந்த விவகாரத்தில் தகுந்த விளக்கத்தை கொடுக்க வேண்டும் என அனுராக் கோரியுள்ளார்.

விராட் கோலி சந்திப்பு
தற்போது வரை இதுகுறித்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சார்பில் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இன்று மதியம் ஒரு மணி அளவில் தான் கோலி தனது பங்கேற்பு குறித்து அனைத்து விதமான பதில்களை கொடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications